2021ல் நீங்க தோற்ற இடங்களை எங்ககிட்ட கொடுங்க.. திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்!
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோட்பாட்டை முன்னெடுத்துள்ளது.

அதிகார பகிர்வு அவசியம், ஆட்சி பங்கு எங்கள் உரிமை என திமுகவை சீண்டி காங்கிரஸ் எம்.பி.., மாணிக்கம் தாகூர் மீண்டும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோட்பாட்டை முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு சில மூத்த நிர்வாகிகள் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. கூட்டணியை முறியடிக்க செய்யப்படும் என சதி என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது ஒவ்வொருவரின் விருப்பம். முதலமைச்சர் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் நல்ல முடிவெடுப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
மீண்டும் மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர்
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பான பதிவுகளை வெளியிட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். முதலமைச்சர் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததை குறிப்பிட்டு, “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு”” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “எல்லாரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது. நீங்க இப்படியெல்லாம் இருக்காதீங்கன்னு நிலைமையை தான் சொன்னேன். கூட்டணி வேண்டாம் என சொல்லும் உரிமை எங்களுக்கு கிடையாது. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான். அவர் தெளிவாக ஆட்சியில் பங்கு கிடையாது என கூறி விட்டார். 2006 தேர்தல் 96 இடங்கள் தான் திமுகவிடம் இருந்தது. அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது 150-160 இடங்களில் திமுக ஜெயிக்கும். 170 தொகுதிகளில் திமுக நிற்கும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உதயசூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி,மற்ற கட்சிகளின் சின்னம் என்றால் ஒரு மாதிரி என தெரிவித்திருப்பார்.
இதனைக் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.





















