பெண் சிசுக்கொலைக்குச் சமம்; 33% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளைச் சாடிய அன்புமணி
பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்து ஒரு முதலமைச்சர் கொண்டாடுகிறார் என்றால் அவரது மனநிலையை தமிழ்நாட்டுப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்- அன்புமணி.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைய வைத்திருக்கிறார்கள்.. இது திமுக பெண்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்ததற்கு சமமான செயல் இது என்று பாமக தலைவர் அன்புமணி சாடியுள்ளார்.
கடலூரில் இன்று பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
’’இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன, பெண்கள் படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், அதிகாரம் வேண்டும் ஆட்சி வேண்டும் என்று வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இது 40 ஆண்டு கால கனவு. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குறைந்தது 33 விழுக்காடு கொடுக்க வேண்டும் என்பது.
பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்து ஒரு முதலமைச்சர் கொண்டாடுகிறார் என்றால் அவரது மனநிலையை தமிழ்நாட்டுப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த மசோதா நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டிற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து பெண்கள் 20 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று இருப்பார்கள். 2031 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து 117 பெண் எம்எல்ஏக்கள் கிடைத்திருப்பார்கள்..
பாதுகாப்பும் இல்லை, அதிகாரமும் இல்லை
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகக் கூடாதா? ஒரு பக்கம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மற்றொருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய சட்டத்தையும் திமுக எதிர்க்கிறது.
மக்கள் தொகைக்கும், இந்த தொகுதி மறு வரையறைக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அனைவருக்கும் சமமான இடங்கள்தான் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட சட்டத்தை வரவிடாமல் திமுக தடுத்துவிட்டது.
ஒரு முதலமைச்சர் ஒரு முன்னாள் முதலமைச்சரைப் பற்றி இப்படி தரக்குறைவாக பேசலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் என்னைப் பற்றியும் ஈபிஎஸ்ஐ பற்றியும் இப்படி தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார்?
தரம் தாழ்ந்து தனி நபர் தாக்குதல்
தமிழ்நாட்டை ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்தாண்டு காலத்தில், தான் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். எந்த சாதனையும் செய்யவில்லை, அதனால் அதை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. அதனால் தரம் தாழ்ந்து தனி நபர் தாக்குதல் நடத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். 8000 ரூபாய் கூப்பன் தருகிறோம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்..
திமுக கூட்டணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. எங்கள் கூட்டணி வேகமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.
திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே
பிரேமாதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தேமுதிக விஜயகாந்த் தொடங்கினார் ஆனால் அந்த திமுக உடனே பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி வைத்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும் அந்த கூட்டணிக்கு சென்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒருவரே போதும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா மது கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்றுசொல்ல. முதலமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே எங்கு பார்த்தாலும் போதை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்




















