Anbumani Ramadoss: வெற்றி நமதே.. விழிப்புடன் இருங்கள்.. அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!
நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நாளில் அதிமுக, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் நிலையில் பதிவான வாக்குகள் அனைத்து மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களாக செயல்படுபவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
அதன்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக - பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு - பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க. பா.ஜ.க. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.
நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















