தர்மபுரியில் 3 முக்கிய பிரச்சினைகள்; வென்றதும் சிப்காட்- செளமியா அன்புமணி பிரச்சாரம்!
தர்மபுரி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்- செளமியா அன்புமணி

தமிழ்நாட்டில் அடுத்ததாக அதிமுக ஆட்சி அமைந்ததும் தர்மபுரி மாவட்டத்திற்கு 'சிப்காட் தொழில்பேட்டை' கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்வேன் என சௌமியா அன்புமணி வாக்குறுதி அளித்துள்ளார். பிரச்சாரத்தின்போது அவர் இதுபோல இன்னும் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உடபட்ட பல்வேறு கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பாமக மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தர்மபுரி மாவட்டத்திற்கு மூன்று முக்கிய பிரச்சினைகள்
அனைவரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின் சௌமியா அன்புமணி பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய அவர், ’’தர்மபுரி மாவட்டத்திற்கு மூன்று முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று குடிநீர் பிரச்சனை, இரண்டாவது வேலை வாய்ப்பின்மை மற்றும் மது போதை சீரழிவு.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான குடிநீர் பிரச்சனையை அதிமுக அரசு சரி செய்து கொடுக்கும். தர்மபுரி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்.
தர்மபுரியில் அதிக அளவில் மாம்பழ விளைச்சல் இருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான மாம்பழக் கூழ் தொழிற்சாலை கொண்டுவரப்படும்.
போதைப் பொருட்கள் ஒழிப்பு
இன்றைக்கு தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டது. அடுத்து அமையக்கூடிய ஆட்சியில் போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும். போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்’’
இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.
தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின்கீழ் பாமக வேட்பாளராக, பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.





















