விழுப்புரம் மாணவர்களே! பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ₹5000 வெல்லலாம்..!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்குபெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்குபெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021- 22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி முருங்கபாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 09.09.2025, 10.09.2025 ஆகிய நாள்களில் முற்பகல் 10.00 மணிக்கு "பள்ளி மாணவர்களுக்கும்", 11.09.2025 அன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் "கல்லூரி மாணவர்களுக்கும்" பேச்சுப்போட்டி நடைப்பெறவுள்ளது.
வழங்கப்படும் பரிசுத்தொகைகள் :
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில்
- முதல் பரிசாக ரூ.5000/-
- இரண்டாம் பரிசாக ரூ.3000/-
- மூன்றாம் பரிசாக ரூ.2000/
மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரு.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது. ஆக மொத்தம் தொகை ரூ.24,000/-த்திற்கு பரிசுகள் வழங்கப்பெறும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ /மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















