TN ITI Admission: கட்டணம் இல்லை; உதவித்தொகை உண்டு- உறுதியாக வேலை! ஐடிஐக்களில் சேர்வது எப்படி?
TN ITI Admission 2025: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும்.

ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில் கூறி உள்ளதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 125 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 301 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடிச் சேர்க்கை 23.06.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வது எப்படி?
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும்.
தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
85% பேருக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.
அலைபேசி எண்: 9499055642
whatsapp எண்: 9499055618






















