DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது.

ஆண்டுதோறும் 1000 ரூபாய் என்ற அளவில் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்க நடத்தப்படும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (ட்ரஸ்ட்) விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியான மாணவர்கள், நவம்பர் 4ஆம் தேதி இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான "ஊரகத் திறனாய்வு தேர்வு" நடைபெற்று வருகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவியர்கள் தகுதி உடையவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
ஆண்டு வருமானம்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்
29.11.2025 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்களை 28.10.2025 முதல் 04.11.2025 வரை பெறலாம்.
தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை தேர்வெழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 04.11.2025-க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம்
ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரிடமிருந்தும் தேர்வுக் கட்டணமாக ரூ.10-ஐ பணமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்தல்
தேர்வர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட அவ்விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இவ்வலுவலக இணையதளத்தில் சென்று தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட USER ID, Password மூலம் தலைமை ஆசிரியர் தேர்வர்களின் அனைத்து விண்ணப்பங்களையும் 29.10.2025 முதல் 05.11.2025 Online மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்படி தேதிக்கு பிறகு பதிவு செய்வது இயலாது என்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படா வண்ணம் 05.11.2025 க்குள் பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ளவாறு அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்த பிறகு இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு மாணவர்களின் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இயலாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/






















