கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
திருப்பத்தூர்: தலைமை ஆசிரியர் உத்தரவால், பள்ளியில் கழிவுநீர் பள்ளம் தோண்டிய பள்ளி மாணவர்கள்! அதிர்ச்சி வீடியோ!

கழிப்பறையின் அடைப்பை சரி செய்ய சொன்ன தலைமையாசிரியர்! எப்போதுமே நாங்கதான் வேலை செய்வோம் என கூறி கழிவு நீர் செல்ல பள்ளம் தோண்டிய மாணவர்களின் வீடியோ வைரல்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கேதாண்டப்பட்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார்.
மாணவர்களையே கழிவு நீரை அப்புறப்படுத்தச் சொன்ன ஆசிரியர்
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை நிரம்பி உள்ளதால், அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. இதனால் ஆசிரியர் செந்தில், அதே பள்ளியின் மாணவர்களை பணியில் அமர்த்தி பள்ளம் தோண்டச் செய்துள்ளார்.
இந்த பள்ளி மாணவர்கள் வேலை செய்வதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், இது குறித்து அந்த மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, ’தலைமை ஆசிரியர்தான் இந்த வேலையை செய்ய சொன்னார். இதற்கு முன்பு கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டதை நாங்கள்தான் சரி செய்தோம். அதேபோல இன்றும் நாங்களே வேலை செய்கிறோம், வேலையாட்கள் வராததால் தலைமை ஆசிரியர் எங்களை வேலை செய்ய சொன்னார்’’ என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
வைரலாகும் வீடியோ
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் எடுத்த வீடியோவில் இவை அனைத்தும் பதிவாகி உள்ளது. அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போல் மாணவர்களை பணியில் அமர்த்தும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























