தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி 11,773 பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், கடந்த 2021 தேர்தலின் போது திமுக அளித்த 181-வது வாக்குறுதியான 'பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம்' இதுவரை நிறைவேற்றப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் விடுத்துள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நிறைவேற்றப்படாத 181-வது வாக்குறுதி
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக அறிவித்திருந்தது. முன்னதாக 2016 தேர்தலிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தாதது 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதியொதுக்கீடு கோரிக்கை
தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்திற்காக ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவர்களுக்குக் காலமுறை ஊதியமாக 20,600 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமானால், ஆண்டுக்குத் தோராயமாக 450 கோடி ரூபாய் தேவைப்படும். அதாவது, தற்போதைய செலவை விடக் கூடுதலாக 250 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.
பெண்களின் வாழ்வாதாரத்திற்காக 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு ஒரே நாளில் 6,550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் முதல்வர், 15 ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகத் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்காக இந்தச் சிறிய தொகையான 250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏமாற்றமளிக்கும் அரசாணைகள்
சமீபத்தில் 03.03.2026 அன்று வெளியான அரசாணையில், சம்பள உயர்வு 2,500 ரூபாய் மற்றும் மே மாதத்திற்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கப் போகும் 15,000 ரூபாய் புதிய சம்பளம், இன்றைய உச்சகட்ட விலைவாசி உயர்வில் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடப் போதாது.
"பணிநிரந்தரம் செய்வார் என நம்பியிருந்த எங்களுக்கு, வெறும் சம்பள உயர்வை மட்டும் வழங்கி கண்துடைப்பு செய்வதை ஏற்க முடியாது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது 'சிறப்பு மதிப்பெண்' வழங்கப்படும் என மடைமாற்றம் செய்வதைக் கைவிட்டு, திமுக தனது தேர்தல் வாக்குறுதிப்படி நேரடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்புத் தேர்வு நடத்தக்கூட அரசுக்கு ஏன் மனமில்லை?" எனவும் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
2012-ஆம் ஆண்டு வெறும் 5,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்த இந்த ஆசிரியர்கள், தற்போது 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மார்ச் மாதத்திற்கு மட்டுமாவது கூடுதலாகத் தேவைப்படும் 20 கோடி ரூபாய் நிதியை உடனடியாக ஒதுக்கி, காலமுறை ஊதியத்திற்கான அரசாணையைப் போர்க்கால அடிப்படையில் வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, தங்களுக்கு அளித்த ஆசைவார்த்தைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் 12,000 குடும்பங்களின் வாழ்வாதாரப் போராட்டம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
























