TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
Tamil Nadu School Reopen Date 2025: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கெனவே அறிவித்து இருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்று அண்மையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ’’ இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதல்வர் அலுவலகத்தில் வானிலை குறித்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் சொல்வதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
குறைந்த கோடை வெயில்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், பரவலான இடங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்றே குறைவாக உள்ளது.
முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கக் கோரிக்கை
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வர வேண்டும் என்பதால், முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து முறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.






















