![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Govt School: அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 3.2 லட்சம் மாணவர்கள்; தேர்தலுக்குப் பின் 4 லட்சம் பேரைச் சேர்க்க இலக்கு!
அரசின் பல்வேறு திட்டங்களையும் உதவித் தொகைகளையும் எடுத்துக்கூறி மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
![TN Govt School: அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 3.2 லட்சம் மாணவர்கள்; தேர்தலுக்குப் பின் 4 லட்சம் பேரைச் சேர்க்க இலக்கு! Tamil Nadu Govt Schools Admission Enrollment Crosses 3.2 Lakh to enroll 4 lakh students after the election! TN Govt School: அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 3.2 லட்சம் மாணவர்கள்; தேர்தலுக்குப் பின் 4 லட்சம் பேரைச் சேர்க்க இலக்கு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/b5cb81bccc86135bbe714c5bf52429911712279540494837_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசுப் பள்ளிகளில், இதுவரை 3.2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், 4 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கல்வி ஆண்டும் அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை செயல்படும். மே மாதத்தில் 1 மாதத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கும். எனினும் தற்போதெல்லாம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கி விடுகிறது.
தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அரசுப் பள்ளிகள் சேர்க்கை
தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதலே மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும். மேலும் சில பிரபல பள்ளிகளில், டிசம்பர் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாணவர் சேர்க்கை தற்போது 3.2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
சேர்க்கை அதிகரிக்க என்ன காரணம்?
அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே இவை அனைத்தும் வழங்கப்பட்டு வந்தாலும், அவை பற்றி அதிகளவில் இப்போது விளம்பரங்கள் செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்வேறு விதமான உதவித் தொகைகள், கல்லூரிகளில் உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
57 வகையான திட்டங்கள்
இவை தவிர்த்து, நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, மாணவர் மனசு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, தமிழ்க் கூடல், திறனறித் தேர்வுகள், விழுதுகள் உள்ளிட்ட 57 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரசின் பல்வேறு திட்டங்களையும் உதவித் தொகைகளையும் எடுத்துக்கூறி மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 38 மாவட்டங்களிலும், 3.2 லட்சத்தைத் தாண்டி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
தேர்தல் பணிகளால் சற்றே சுணக்கம்
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மாணவர்களின் சேர்க்கை 22 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. ஜூன் மாதத்தில் மாணவர்கள் சேர்க்கை முடியும்போது, இந்த எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொடும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் காரணமாக மாணவர் சேர்க்கையில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்தபிறகு முழுவீச்சில் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)