கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட் மற்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் இணையத்தில் விற்பனை ஆகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கியூட் எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு மற்றும் பல்வேறு பள்ளிப் பொதுத்தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் ரகசியத் தகவல்கள் இணையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை இந்த விவகாரம் எழுப்பியுள்ளது.
கசிந்த தகவல்கள் என்னென்ன?
கியூட், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அடிப்படை விவரங்கள் பெரும் அளவில் கசிந்துள்ளன. மாணவர்களின் பெயர்கள், பெற்றோரின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இருப்பிட முகவரி மற்றும் தேர்ச்சி விவரங்கள் ஆகியவை இந்தத் தரவுகளில் அடங்கும்.
எங்கே விற்கப்படுகிறது?
இந்த ரகசியத் தரவுகள் டார்க் வெப், டெலிகிராம் சேனல்கள் மற்றும் சில ஹேக்கிங் இணையதளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பேக்கேஜ்களாக விற்கப்படுகின்றன. குறிப்பாக studentdataprovider.com, studentsdatabases.com, studentdatahub.com, studentsdatabase.net, bulkstudentdata.com மற்றும் studentdatabaseindia.com ஆகிய தளங்களில் இந்த விவரங்கள் உள்ளன.
குறிப்பாக க்யூட் தேர்வு எழுதிய சுமார் 15 லட்சம் மாணவர்களின் தகவல் உள்ளதாக studentdataprovider.com விளம்பரம் செய்தது. இவை 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மாணவர்களின் மாநிலம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இந்தத் தரவுகள் வகைப்படுத்தப்பட்டு, யார் வேண்டுமானாலும் பணம்கொடுத்து வாங்கும் வகையில் பொதுவெளியில் சந்தைப்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதுங்கியுள்ள ஆபத்துகள்
இவ்வாறு திருடப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மாணவர்களையும் பெற்றோர்களையும் எளிதாக வலையில் வீழ்த்த முடியும். புகழ்பெற்ற கல்லூரிகளில் கட்டணமில்லா சேர்க்கை வழங்குவதாகக் கூறுவது, வினாத்தாள் கசிந்துவிட்டதாகக் கூறி பணம் பறிப்பது, கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் தருவதாகக் கூறி மோசடி செய்வது போன்ற குற்றங்கள் அதிகரிக்க இது நேரடியாக வழிவகுக்கும். மேலும், மாணவர்களின் எண்களுக்குத் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளும், ஃபிஷிங் லிங்க்குகளும் அனுப்பப்பட்டு வங்கி மோசடிகள் நடைபெறவும் அதிக வாய்ப்புள்ளது.
வல்லுநர்கள் எச்சரிக்கை
தேர்வு நடத்தும் முகமைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமாக இருப்பதே இவ்வளவு பெரிய அளவிலான தரவு திருட்டிற்குக் காரணம் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை (DPDP Act) முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்























