ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
அரசையோ, முதல்வரையோ பிற இயக்க தலைவர்களையோ நாகரிகமற்ற முறையில் விமர்சித்து எந்த ஒரு பதிவும், கோஷங்களையும் எங்களது இயக்கத்தை சார்ந்த ஆசிரியர்கள் யாரும் பதிவு செய்வதில்லை- இடைநிலை ஆசிரியர்கள்.

ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சில பிரிவினைவாதிகள் ஆசிரியர்களுக்கான நலன்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதால் அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள நல்ல இணக்கத்தை திட்டமிட்டு சதி செயல் செய்து முறியடிக்க பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் (SSTA) மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ’’இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து எல்லா ஆட்சி காலங்களிலும் போராடி வருகிறோம். இப்போதும் 2018-ல் தமிழக முதல்வர் எங்கள் போராட்டக் களத்திற்கு நேரில் இரண்டு முறை வந்து கரம் பற்றி கொடுத்த வாக்கான 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சமவேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற கோரி கடந்த 1 மாதமாக போராடி வருகிறோம்.
ஆனால் சில பிரிவினைவாதிகள் ஆசிரியர்களுக்கான நலன்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதால் திட்டமிட்டு மூத்த ஆசிரியர்களை சமூக வலைதளங்களில் வசை பாடுவதும், நாகரிகம் இல்லாமல் பதிவுகளை செய்வதும் அரசையும் விமர்சித்து பதிவுகளையும் செய்து அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள நல்ல இணக்கத்தை திட்டமிட்டு சதி செயல் செய்து முறியடிக்க பார்க்கிறார்கள். அவ்வாறாக செயல்படும் நபர்களுக்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாகரிகமில்லாமல் விமர்சிப்பதில்லை
போராடும் எங்களது SSTA இயக்கமானது கோரிக்கை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மட்டுமே அனைத்து இடங்களிலும் முதல்வரோடு இருக்கும் பதாகைகளையும், பதிவுகளையும், கோஷங்களை பதிவிடுகிறோமே தவிர அரசையோ, முதல்வரையோ பிற இயக்க தலைவர்களையோ நாகரிகமற்ற முறையில் விமர்சித்து எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு பதிவும், கோஷங்களையும் எங்களது இயக்கத்தை சார்ந்த ஆசிரியர்கள் யாரும் பதிவு செய்வதில்லை. சமூக வலைதளங்களில் எங்கள் இயக்கம் சாராத, பிறர் திட்டமிட்டு அவ்வாறு பதிவு செய்தவர்களை கண்டுபிடித்து இதேபோன்று தொடர்ந்து தவறு செய்தால் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவீர்கள் என சுட்டிக்காட்டி அதை அழிக்க செய்துள்ளோம்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
இனிவரும் காலங்களில் எவரேனும் எங்கள் இயக்கத்தின் பெயரையோ படங்களையோ பயன்படுத்தி அரசையோ முதல்வர் அவர்களையோ அமைச்சர் அவர்களையோ இயக்க தலைவர்களையோ விமர்சனம் செய்தால் அவர்கள் மேல் SSTA இயக்கம் சார்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 1 மாதமாக போராட்ட களத்திலுள்ள கடுமையான சூழ்நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் மிகுந்த கட்டுப்பாடு கண்ணியத்தோடு அரசுக்கு கோரிக்கை 311-ஐ நிறைவேற்றக்கோரி மட்டுமே போராட்டம் செய்து வருகிறார்கள் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
ஆசிரியர்களுக்கு நல்ல ஒரு முடிவு
இதனை சென்ற காலங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களின்போதும் இது போன்ற சிலர் திட்டமிட்ட சதி செயலை செய்திருக்கிறார்கள், என்பதை நினைவுபடுத்துகிறோம். இதனை உணர்ந்து போராடும் ஆசிரியர்களுக்கு நல்ல ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கையை புரிந்து மாணவர்களின் கல்வி நலன் இன்னும் இன்னும் பாதிக்கப்படாத வண்ணம் ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைந்து நல்ல ஒரு முடிவை தமிழக முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம்’’ என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























