மேலும் அறிய
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது !
அனைத்து குழந்தைகளையும் 01.06.2026 முதல் அங்கன்வாடி மையங்களில் சேர்த்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

பொற்கொடி சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whatsapp
சிவகங்கை மாவட்டம் அங்கன்வாடி மையங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சேவைகளை குழந்தைகள் பெறுவதற்கு ஏதுவாக வருகின்ற 01.06.2026 முதல் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
1552 குழந்தைகள் மையங்கள்
சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் 1552 குழந்தைகள் மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை தங்களது அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அனைத்து பெற்றொர்களும் சேர்த்து பயன்களை பெறலாம். அங்கன்வாடி மையங்கள் வாயிலாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு பயன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில், கருவுற்ற தாய்மார்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி அங்கு வழங்கப்படும் சத்துமாவினை அந்தந்த மாத அளவுப்படி அங்கன்வாடி பணியாளர் கூறும் அளவில் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பயன்பெறுவதற்கு தங்களது ஆதார் மற்றும் மொபைல் எண் அங்கன்வாடி பணியாளரிடம் வழங்கி அதனை போஷான் டிராக்கர் செயலியில் பதிவிட்டு முக பதிவு அங்கீகாரம் (Facial Recognition System) வாயிலாக மாதந்தோறும் சத்து மாவு பாக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாத அளவுப்படி வழங்கப்பட்டு வருகிறது
மேலும், குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை பாலூட்டும் தாய்மார்கள், குழந்தை பிறந்து 6 மாதம் முடிந்து 7-வது மாதம் முதல் 24-வது மாதம் வரையிலான குழந்தைகள் ஆகிய இருவரும் தினசரி சாப்பிடுவதற்கான சத்து மாவு பாக்கெட்டுகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும் அங்கன்வாடி பணியாளரால் அந்தந்த மாத அளவுப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதில் பயன்பெறுவதற்கு தங்களது ஆதார் மற்றும் மொபைல் எண் அங்கன்வாடி பணியாளரிடம் வழங்கி அதனை போஷான் டிராக்கர் செயலியில் பதிவிட்டு முக பதிவு அங்கீகாரம் (Facial Recognition System) வாயிலாக மாதந்தோறும் சத்து மாவு பாக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இரண்டு வயது முடிவுற்ற குழந்தைகள் அவர்களது கற்றல் திறனை மேம்படுத்தவும், சிறப்பான கல்வித்திறன் பெறவும் ஏதுவாக தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்து அவர்களுக்கான. முன்பருவக்கல்வி பெற வேண்டும். இங்கு இந்த முன்பருவக்கல்வி குழந்தைகளுக்கு தினசரி காலை 9 மணி அளவில் சத்துமாவு உருண்டை அல்லது கொழுக்கட்டையாக வழங்கப்படுகிறது, மாலை 03.00 மணி அளவில் சத்துமாவு உருண்டை அல்லது கொழுக்கட்டையாக வழங்கப்படுகிறது. மேலும், தினசரி மதிய உணவு ஒவ்வொரு நாள் உணவு அட்டவணைப்படி
வழங்கப்படுகிறது, வாரத்தில் 3 நாட்கள் முட்டையும் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் தினசரி காலை 08.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை கட்டாயம் அங்கன்வாடி மையத்தில் இருந்து முன்பருவக்கல்வி பயில வேண்டும்.
கண்காணிக்கப்பட்டும் வருகிறார்கள்.
மேலும், மாதந்தோறும், குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளரால் எடை, உயரம் (தொட்டில் அமைப்பிலான எடை எடுக்கும் கருவி-Salter Scale) அளவிட்டு போஷான் டிராக்கர் செயலியில் பதிவிடப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு எடை உயரம் குறைபாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடும் வகையில் மையத்தில் இருந்து பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து குழந்தைகளின் எடை, உயரம் அளவீடுகள் செய்யப்படும் போது, ஏதேனும் குழந்தைகள் இயல்பு நிலைக்கு கொண்டுவர இயலாத நிலையில் தொடருமேயானால் அந்த குழந்தைகளுக்கு RBSK எனும் மருத்துவ குழுவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகளுக்காகவும் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர், மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டும் வருகிறார்கள்.
குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு உபகரணங்கள்
அங்கன்வாடி மையத்திலும், குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு உபகரணங்கள், முன்பருவக்கல்வி புத்தகங்கள், முன்பருவக்கல்வி கற்கும் உபகரணங்கள் மற்றும் அங்கன்வாடி மைய முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கு சீருடைகள் ஆகியவை குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மைய சேவைகளானது தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து அனைத்து மையங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பெற்றோர்கள் கருத்தில் கொண்டு அனைத்து குழந்தைகளையும் 01.06.2026 முதல் அங்கன்வாடி மையங்களில் சேர்த்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















