மாநிலம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு; இன்று வந்த அதிரடி உத்தரவு!
பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்- பள்ளிக் கல்வித்துறை.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடர்களையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்:
- மிதிவண்டி பாதுகாப்பு: மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது, சகதிகளில் வழுக்கி விழும் அபாயம் குறித்து எடுத்துரைத்து, பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும்.
- மழைக்கால உடைகள்: மாணவர்கள் மழையில் நனையாமல் இருக்க மழைக் கோட்டுகள் அல்லது குடைகளைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். குடைகளைக் கொண்டு வரும்போது மாணவர்கள் தங்களுக்குள் விளையாடக் கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட வகுப்பறைகள்: மழையின் காரணமாக பள்ளியில் ஏதேனும் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாகப் பூட்டி வைத்து, மாணவர்கள் அவற்றின் அருகே செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
- சுற்றுச்சுவர் பாதுகாப்பு: தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் எவரும் சுவர் அருகில் செல்லாதவாறு கண்காணிக்கவும் வேண்டும்.
- நீர்தேக்கப் பள்ளங்கள் மற்றும் கிணறுகள்: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன், மாணவர்கள் அவற்றின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
- கட்டிட மேற்கூரைகள்: பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், தேங்கும் பட்சத்தில் உடனடியாக நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கட்டிடப் பணிகள்: பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்ல தடை விதிக்கவும், அப்பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பாக தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஆபத்தான இடங்கள்: மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளுக்கு அருகில் செல்வதையும், அவற்றில் குளிப்பதையும் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்படவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் அவைகளின் அருகே வேடிக்கை பார்க்கச் செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- மின்கம்பிகள் மற்றும் மின்சாதனப் பாதுகாப்பு: பள்ளியை விட்டுச் செல்லுமபோது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாகத் தொடர்புகொண்டு அதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.
- பழுதுபட்ட மின்சாதனங்கள்: பழுதுபட்ட மின்சாதனப் பொருட்கள் ஏதேனும் பள்ளி வளாகத்தினுள் இருப்பின், அவற்றைப் பயன்படுத்தாமலும், தேவையேற்படின் உடனடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- விழக்கூடிய மரங்கள்: பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
- உயர் மின்னழுத்த மின்கம்பங்கள்: பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின், மின்வாரியப் பொறியாளர்களை உடனடியாக தொடர்புகொண்டு அவைகளை அகற்ற ஆவண செய்ய வேண்டும்.
- சுவிட்சுகள்: சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
- மின்சாதனங்கள் இயக்கம்: மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.
- சுகாதாரப் பாதுகாப்பு: மழைக் காலங்களில் தங்களை மழையில் இருந்து காத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என்றும், அதனால் மாணவர்களுக்கு இடி மின்னல் போன்றவைகளினால் ஆபத்து நேரிடக் கூடும் என அறிவுறுத்த வேண்டும். பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன், ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
- பொதுப் பாதுகாப்பு: பள்ளி வளாகத்திற்குள்ளும், வெளியிலும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்காணிப்பு
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்களின் பள்ளிப் பார்வையின்போதும் மற்றும் ஆய்வின்போதும் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.






















