Scholarship: பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன ஆவணங்கள் தேவை?
Pre Matric Post Matric Scholarship: 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவர்கள், போஸ்ட் மெட்ரிக், ப்ரிமெட்ரிக் உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ன ஆவணங்கள் தேவை? பார்க்கலாம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் இவை செயல்படுத்தப்படுகின்றன.
2024- 2025ஆம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள்
கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
2024- 2025-ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (நோடல் அதிகாரி) அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய கல்லூரி மாணாக்கர்கள் கீழ்காணும் ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- வருமானச் சான்றிதழ் (பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்).
- சாதிச் சான்றிதழ் (வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்).
- மாணாக்கரின் ஆதார் எண்ணுடன் மாணாக்கர்களின் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும். அவ்வங்கிக் கணக்கு செயல்பாட்டில் (Active) உள்ள கணக்காக இருக்க வேண்டும்.
இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆதிதிராவிடர், கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.01.2025.
இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























