போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
செல்போன், இன்டர்நெட் கிடையாது: நீட் மறுதேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்கள் ஜூன் 21 வரை ரகசிய அறையில் தனிமை.

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் குழு, முன்னெப்போதும் இல்லாத வகையில், அதீத கட்டுப்பாடுகளுடன் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இந்த ஆண்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. இதனைத் தொடர்ந்து, தேர்வே ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறுகிறது.
என்ன காரணம்?
முந்தைய தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் பல முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த மறுதேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் மிகவும் நேர்மையாக நடத்த மத்திய கல்வி அமைச்சகமும், தேசிய தேர்வு முகமையும் சில கடுமையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதன் ஒரு முக்கியப் பகுதியாக, நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அடங்கிய கல்வி நிபுணர்கள் குழு, முன்னெப்போதும் இல்லாத வகையிலான அதீத கட்டுப்பாடுகளுடன் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜூன் 21ஆம் தேதி வரை ரகசிய கண்காணிப்பு வளையம்
வினாத்தாள் கசிவை ஆரம்பத்திலேயே முழுமையாகத் தடுக்கும் நோக்கத்துடன், வினாத்தாள் தயாரிக்கும் நிபுணர்கள் அனைவரும் செல்போன், மடிக்கணினி மற்றும் இணையதள வசதி என எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதியும் இல்லாத ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், இவர்கள் ஜூன் 21ஆம் தேதி வரை அந்த ரகசிய கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே மிகுந்த பாதுகாப்போடு வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
வினாத்தாள் தயாரிக்கும் அந்த குறிப்பிட்ட அறைக்குள் எந்தவொரு மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்ல யாருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. மேலும், அங்குள்ள லேண்ட்லைன் தொலைபேசிகள் கூட மிக அவசரத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதுவும் உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ், உரையாடல்கள் கண்காணிக்கப்படும் வகையிலேயே அந்த தொலைபேசி வசதியும் அமைக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பான முறையில் சீல்
வினாத்தாள் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, அவை மிகவும் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்படும் வரை இந்த நிபுணர்கள் குழு அந்த இடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
கடந்த முறை நடந்த வினாத்தாள் கசிவு விவகாரம் காவல் துறை விசாரணையைத் தாண்டி, உச்சநீதிமன்றம் வரை சென்று பெரும் அரசியல் சர்ச்சையானதால், இம்முறை அப்படி ஒரு சிறு தவறு கூட மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் தேர்வு நடத்தும் அதிகாரிகள் மிகத் தெளிவாக உள்ளனர். அதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையிலான அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















