தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
நீட் முதல் டெட் வரை: வினாத்தாள் கசிவு, மோசடி,தேர்வு ரத்து- மத்திய அரசால் தொடரும் குழப்பங்கள் - தவிக்கும் மாணவர்கள்!

இந்தியாவில் சமீப காலமாக நடைபெறும் தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கியப் போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, திடீர் ஒத்திவைப்பு மற்றும் ரத்து நடவடிக்கைகள் தொடர் கதையாகி வருகின்றன.
இதனால் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்சம் தேர்வை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு பகலாகப் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகளில் நடந்த குளறுபடிகளின் முழுமையான தொகுப்பு இதோ:
நீட் தேர்வு
தேசிய அளவிலான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, இந்த விவகாரம் சிபிஐ விசாரணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீடு வரை சென்றது. தொடர்ந்து நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. எனினும் தொடர்ச்சியான முறைகேடுகள் காரணமாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் குரல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
2024 நெட் தேர்வுகள் (UGC-NET & CSIR-NET)
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான யுஜிசி நெட் தேர்வு நடந்து முடிந்த மறுநாளே அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தேர்வின் ரகசியத்தன்மை டார்க் வெப் இணையதளம் மூலமாக கசிந்து சமரசம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
இதன் எதிரொலியாக, ஜூன் மாதம் நடைபெறவிருந்த அறிவியல் பாடங்களுக்கான சிஎஸ்ஐஆர்-நெட் தேர்வும் தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)
மத்திய அரசின் தேர்வுகள் மட்டுமின்றி, மாநில அளவிலான தேர்வுகளிலும் இதே அவலநிலைதான். பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' (TET) மற்றும் காவலர், அரசுப் பணியாளர் தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அரங்கேறின. பல இடங்களில் வினாத்தாள் லீக் ஆனதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச போலிஸ் கான்ஸ்டபிள் தேர்வு (UP Police Constable Recruitment Exam), மறுஆய்வு அதிகாரி அல்லது உதவி மறுஆய்வு அதிகாரி முதல்நிலைத் தேர்வு (UP RO, ARO Prelims) ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.
பல்வேறு மாநிலத் தேர்வுகள்
அதேபோல உத்தராகண்ட் UKSSSC தேர்வுகள் 2025ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து ஹரியாணா உதவிப் பேராசிரியர் இந்தி தேர்வு, உ.பி. இசிஆர் டிபார்ட்மெண்ட்டல் தேர்வு (ECR Exam) ஆகியவற்றிலும் சர்ச்சை எழுந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.
விமர்சனத்தில் NTA
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், தேர்வு முறையில் உள்ள ஓட்டைகளை அடைத்து, முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























