அரசு அங்கீகாரம்: "தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பள்ளிகள் தொடங்க வேண்டுமா? நாகை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!"
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தொழிற் பிரிவுகளுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய வேண்டிய நடைமுறைகள்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொழில்சார் கல்வி பயிற்றுவிக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே தொழிற்பள்ளிகளை நடத்தி வருவோர் கீழ்க்கண்ட பணிகளுக்காக:
*புதிய தொழிற்பள்ளிகள் (New Industrial Schools) தொடங்குதல்.
*தற்போதுள்ள தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் (Renewal of Affiliation).
* புதிய தொழிற் பிரிவுகளைத் (New Trades) தொடங்குதல்.
* தற்போதுள்ள தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் (Additional Units) சேர்த்தல்.
மேற்கண்ட தேவைகளுக்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 2026 பிப்ரவரி 28-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த விண்ணப்ப முறை
இந்தக் கல்வியாண்டிற்கான அங்கீகாரம் பெறும் நடைமுறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
"2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து தொழிற் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கான விவரங்கள் அனைத்தையும் அந்த ஒரே விண்ணப்பத்திலேயே உள்ளீடு செய்ய வேண்டும். தனித்தனியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை."
கட்டண விவரங்கள் மற்றும் செலுத்தும் முறை
விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான கட்டண விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணத்தை RTGS / NEFT ஆகிய மின்னணு பணப்பரிமாற்ற முறைகளின் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் (அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து) ரூ. 5,000
ஆய்வுக் கட்டணம் - ரூ. 8,000
மொத்தம் - ரூ.13,000
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாளான 28.02.2026-க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும், அவை நேரடியாக நிராகரிக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
நிபந்தனைகள் மற்றும் கூடுதல் தகவல்கள்
தொழிற்பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், பயிற்றுநர்களின் தகுதி மற்றும் ஆய்வக வசதிகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்
விண்ணப்பிப்பதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால், கீழ்க்கண்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்:
சென்னை மண்டல அலுவலகம்:
* தொலைபேசி: 044-22501006 (Ext: 113)
* மின்னஞ்சல்: detischennai@gmail.com
நாகப்பட்டினம் மாவட்ட அலுவலகம்: *தொலைபேசி: 04365-250126
*மின்னஞ்சல்: adcentrenagapattinam@gmail.com
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாவட்டத்தின் கல்வி மற்றும் தொழில் வளத்தைப் பெருக்க முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
























