அக்டோபர் 31 கடைசி நாள்! மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை: உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஐஐஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (மி.பி.வ & சீ.ம) மாணவ, மாணவிகளுக்கு, 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் சாராம்சங்கள்;
உதவித்தொகை விவரங்கள்:
தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பி.வ, மி.பி.வ, மற்றும் சீ.ம வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தகுதியுடையவர்கள். இவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் பிற கட்டாய கட்டணங்கள் முழுமையாக வழங்கப்படும். ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்களும் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் முடியும்.
விண்ணப்ப படிவத்தை, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5; மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5; அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றாக, விண்ணப்ப படிவத்தை https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அந்த விண்ணப்பங்களை சரிபார்த்து, தங்கள் சான்றொப்பத்துடன் உரிய இயக்ககங்களுக்கு பரிந்துரை செய்யும்.
புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள்:
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள், செப்டம்பர் 30, 2025-க்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
புதிய (Fresh) விண்ணப்பங்கள்:
புதிய விண்ணப்பங்கள், அக்டோபர் 31, 2025-க்குள் அனுப்பப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலும், tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.






















