மாணவர்களே… JEE மெயின் தேர்வுக்கு தொடங்கிய விண்ணப்பப் பதிவு- எப்படி? முக்கிய வசதி அறிமுகம்!
JEE Main 2026: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், அதற்கு பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேசியத் தேர்வுகள் முகமை.

தேசியத் தேர்வுகள் முகமை, 2026ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (JEE Main) இரண்டாவது அமர்வுக்கான (ஏப்ரல் மாத அமர்வு) முன்பதிவைத் தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எதற்காக இந்தத் தேர்வு?
நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர, அதன் மேம்படுத்தப்பட்ட (அட்வான்ஸ்ட்) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
முக்கியத் தேதிகள்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 25, 2026.
தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9, 2026 வரை.
விண்ணப்பிக்கும் முறை
- மாணவர்கள் nta.nic.in என்றஅதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் "Candidate Activity" பிரிவு இருக்கும்.
- அதன் கீழ் உள்ள "Registration for JEE Main Session II" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் "New Registration" என்பதைத் தேர்வு செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பத்தை வருங்காலத் தேவைக்கான பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000 என்ற எண்ணில் NTA-வைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு கூகுளின் புதிய வசதி
ஐஐடி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. மாணவர்கள் தங்கள் திறனை சோதித்துக்கொள்ளும் வகையில் இலவச 'மாதிரித் தேர்வு' (Mock Test) வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயில உதவும் SAT தேர்வுகளுக்கான பயிற்சியை கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஜேஇஇ மாணவர்களுக்கும் இந்த வசதியை வழங்கியுள்ளது.
முதல் அமர்வு முடிவுகள் எப்போது?
ஜனவரி மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் மீது பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மாணவர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அனைத்து மதிப்பீட்டுக்குப் பிறகு, பிப்ரவரி 12-ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று NTA தெரிவித்துள்ளது. ஜனவரி 21 முதல் 29 வரை இந்தத் தேர்வு நடைபெற்றது. இதில், ஆள் மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார முறைகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
























