JEE Advanced 2025: வெளியான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள்; மாணவர்கள் மானத்தைக் காத்த ரஜித்- எவ்வளவு மார்க்?
2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் மொத்தம் 54,378 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக மே 18ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற்றது.

ஐஐடிக்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுளை ஐஐடி கான்பூர் இன்று வெளியிட்டுள்ளது. இதில், ரஜித் குப்தா என்னும் ஐஐடி டெல்லி மாணவர், 360 மதிப்பெண்களுக்கு 332 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
54,378 பேர் தேர்ச்சி
2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் மொத்தம் 54,378 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக மே 18ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற்றது. இரண்டு தாள்களையும் 1,80,422 மாணவர்கள் எழுதி இருந்தனர். தேர்ச்சி பெற்ற தேர்வர்களில் சுமார் 9 ஆயிரம் பேர் மாணவிகள் ஆவர்.
முதலிடம் பெற்ற மாணவி யார்?
இந்தத் தேர்வில் ஐஐடி காரக்பூர் பகுதியைச் சேர்ந்த தேவ்தத்தா மஜி என்னும் மாணவி, ஒட்டுமொத்த அளவில் 16ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 312 மதிப்பெண்களைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து ஐஐடி கான்பூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆர்க்கிடெக்சர் ஆப்டிட்யூட் தேர்வுக்கான (AAT) விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. ஜூன் 3ஆம் தேதி வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது எப்படி?
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைக் கொண்டு மொத்த மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும்.
அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள்: 360
கணிதத்தில் அதிகபட்ச மதிப்பெண்கள்: 120
இயற்பியலில் அதிகபட்ச மதிப்பெண்கள்: 120
வேதியியலில் அதிகபட்ச மதிப்பெண்கள்: 120
முன்னதாக நேற்று, 2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பு, இரண்டு தாள்களுக்கு வெளியிடப்பட்டது. தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணையதள மூலம் காணலாம்.
ஜோசா எனப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு கவுன்சலிங் (JEE Advanced counselling 2025 – JoSAA) விண்ணப்பப் பதிவு நாளை (ஜூன் 3ஆம் தேதி) தொடங்குகிறது.






















