IIT Madras: பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஐஐடி சென்னை; அசத்தல் திட்டம் அறிமுகம்- என்ன தெரியுமா?
ஐஐடி சென்னை ‘பள்ளி இணைப்பு’ திட்டம் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐஐடி மெட்ராஸ், ‘பள்ளி இணைப்பு’ திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இப்படிப்புகளில் சேர முடியும். இந்த முன்முயற்சியின் மூலம் ஏற்கனவே இருந்து வந்த இரு படிப்புகள் 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
ஐஐடி சென்னை ‘பள்ளி இணைப்பு’த் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ‘தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு’ (Data Science and Artificial Intelligence), ‘மின்னணு அமைப்புகள்’ (Electronic Systems) ஆகிய இரு படிப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 10 ஆன்லைன் நடைமுறை சான்றிதழ் படிப்புகள் இப்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை 8 வாரகாலப் படிப்புகளாகும்.
ஜூலை 25 கடைசி
ஆகஸ்ட் 2025 தொகுதிக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை பதிவு செய்ய ஜூலை 25-ம் தேதி கடைசி நாளாகும். code.iitm.ac.in/schoolconnect/ என்ற இணையதளத்தில் பள்ளிகள் தங்களின் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அது என்ன பள்ளி இணைப்புத் திட்டம்?
பள்ளி இணைப்புத் திட்டம் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (Centre for Outreach and Digital Education - CODE) முதன்மையான அவுட்ரீச் முயற்சியாகும். பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இதுபற்றி ஐஐடி சென்னை, அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (CODE) தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, "பல்வேறு துறைகளில் இளம்பிராயத்தினரை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை எங்களின் சமூகப் பொறுப்பாகக் கருதுகிறோம். இந்த நோக்கத்தில் எங்களுடன் இணையவும், மாணவர்கள் தகவலறிந்த தொழில் தேர்வுகளைச் செய்ய உதவவும் அதிகளவிலான பள்ளிகளை அழைக்கிறோம்" என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, வளர்ந்து வரும் துறைகளை ஆராய்ந்து, அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில் பாதைகள் குறித்து முடிவெடுக்க இந்தத் திட்டம் உதவும். அசைன்மெண்ட்கள், நேரடி அனுபவத்தைப் பெறும் வகையில் விருப்பப் பாடம் ஆகியவையும் இப்படிப்புகளில் அடங்கியுள்ளன.
நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி ஆகிய மாதங்களில் 3 தொகுதிகளாக இப்பாடத்திட்டங்கள் நடத்தப்படும், இதனால் பள்ளிகளும் மாணவர்களும் ஆண்டுதோறும் மூன்று பாடத்திட்டங்களைப் பெற முடியும்.
ஏற்கனவே 2,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்திருப்பதால், 50,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில் இக்கல்வி நிறுவனம் தற்போது பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10 மாறுபட்ட திட்டங்களை வழங்க இந்த திட்டத்தை விரிவுபடுத்துகிறது. ஒவ்வொரு பாடமும் மாணவர்கள் உயர்கல்வி தேர்வுகளை எடுப்பதற்கு முன்பு நடைமுறையில் உள்ள துறைகளைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு வழங்குகிறது.
வழங்கப்படும் பாடத்திட்டங்கள் என்னென்ன?
‘1. தரவு அறிவியல்- செயற்கை நுண்ணறிவு அறிமுகம்
(Introduction to Data Science and AI)
- மின்னணு அமைப்புகளின் அறிமுகம் (Introduction to Electronic Systems)
- கட்டிடக்கலை- வடிவமைப்புக்கான அறிமுகம் (Introduction to Architecture & Design)
- கணிதம்- கணினி இயக்கத்துடன் வேடிக்கை (Fun with Math and Computing)
- தடையற்ற கணிதம்: விளையாட்டுகள் & புதிர்கள்
(Math Unplugged: Games & Puzzles) - சூழலியல் அறிமுகம் (Introduction to Ecology)
- பொறியியல் உயிரியல் அமைப்புகளுக்கான அறிமுகம்
(Introduction to Engineering Biological Systems) - சட்டம் அறிமுகம் (Introduction to Law)
- விண்வெளியின் அடிப்படைகள் (The Fundamentals of Aerospace)
- தடையற்ற மனிதநேயம் (Humanities Unplugged)
இவ்வாறு ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.






















