தொடரும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு- உயர்நிலைக் குழு அமைப்பு
இந்தக் குழு தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றத்தின் (NETF) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர் வளாகத்தில் 25 வயதுடைய முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர், விடுதிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்குள் அந்த வளாகத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும். அதேபோல ஐஐடிகளில் கடந்த 4 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட மத்தியக் கல்வி அமைச்சகம், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலன் காக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
குழுவின் நோக்கம் என்ன?
இந்தக் குழு தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றத்தின் (NETF) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூல்சந்த் மருத்துவமனையின் மூத்த மனநல மருத்துவர் ஜிதேந்திர நாக்பால் மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம், மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், வளாகங்களில் சுமூகமான சூழலை உருவாக்கவும் மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை (Framework Guidelines) வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்கள் ஐஐடி கான்பூரில் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பதை இக்குழு ஆய்வு செய்யும்.
மேலும், ஐஐடி கான்பூரில் கடந்த காலங்களில் நடந்த தற்கொலைச் சம்பவங்கள், அதற்கான பின்னணி, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனை வசதிகள் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் இந்தக் குழு விரிவாக விசாரிக்கும்.

15 நாட்களில் அறிக்கை
கல்வி நிலையங்களில் உள்ள கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து, இனிவரும் காலங்களில் மாணவர்கள் மன அழுத்தத்தால் தவறான முடிவுகளை எடுப்பதைத் தடுக்கத் தேவையான பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஐடி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி, மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் உதவும் ‘நட்பு ரீதியிலான வழிகாட்டுதல்’ (Buddy- mentor system), மற்றும் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உதவுதல் போன்றவை அரசின் வழிகாட்டுதல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























