பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
ஆயுஷ்மான் பாரத் பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலியல் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விரிவான பாலியல் கல்வி (Comprehensive Sex Education) அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசு இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலியல் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கல்வியின் நோக்கம் மற்றும் அம்சங்கள்
மாணவர்களிடையே பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கான பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 26 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நிபுணர் குழுவால் இந்தப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுவில், TISS நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சட்ட வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.
குழந்தைகளுக்கு அவர்களின் தொடக்க நிலையில் இருந்தே வயதுக்கு ஏற்ற வகையில் பாடங்கள் அமைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளியும் ஒரு ஆசிரியர் நிபுணரை நியமிக்க வேண்டும். அவர் வாரத்தில் குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு 15 முதல் 20 நாட்களுக்கு கட்டாயம் வகுப்பு நடத்த வேண்டும்.
பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளவை
இதில் உடல் மற்றும் உணர்வுபூர்வமான நல்வாழ்வு, தனிப்பட்ட உறவுகளைக் கையாளுதல், பாலின சமத்துவம், ஊட்டச்சத்து, உடல் பாதுகாப்பு, சுகாதாரம், உடல் உறுப்புகளை புரிந்துகொள்ளுதல், சரியான தொடுதல், தவறான தொடுத, ரிலேஷன்ஷிப்புகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன
செயல்படுத்தும் முறை
இந்த திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதர்களாக செயல்பட சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் முழுமையாகக் குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் மகாதேவன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவற்றை நாடு முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்























