’’காஃபி வித் திராவிட மாடல் மாணவர்கள்’’ பிரிட்டனில் இருந்து அமைச்சர் அன்பில் நெகிழ்ச்சி பதிவு!
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தும் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் மூலம் லண்டனில் பயின்று வரும் மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

ஒருங்கிணைந்த பிரிட்டன் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “காஃபி வித் அன்பில்” சந்திப்பின் மூலம் தமிழ்ச் சொந்தங்களோடு உரையாடியதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
''ஒருங்கிணைந்த பிரிட்டன் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “காஃபி வித் அன்பில்” சந்திப்பின் மூலம் தமிழ்ச் சொந்தங்களோடு உரையாடினோம்.
காஃபி வித் திராவிட மாடல் மாணவர்கள்
இந்நிகழ்வு “காஃபி வித் திராவிட மாடல் மாணவர்கள்” என்று அமைந்ததுதான் சிறப்பு! ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக #DravidianModel அரசு செயல்படுத்தும் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் மூலம் லண்டனில் பயின்று வரும் மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர். அவர்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
மாணவர்களோடு இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தடைக்கல்லாக இருந்த வறுமை
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இரு மாணவர்கள் பேசுகின்றனர். அதில் மாணவி குருஷியா ஜெயராமன் கூறும்போது, ’’தஞ்சாவூரைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான் லண்டனில் நிற்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இங்கே சேர்ந்து படிக்க ரூ.36 லட்சம் தேவைப்பட்டது. முன்னேற வேண்டும் என்பதற்கு வறுமை எனக்கு தடைக்கல்லாக இருந்தது.
ஆனால் தமிழக அரசு நான் இங்கே வர உதவி செய்தது. வருங்காலத்தில் என்னைப் போல 10 மாணவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன்’’ என்று தெரிவித்தார். அதேபோல சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் என்னும் மாணவரும் அரசின் உதவித் திட்டங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.






















