CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?
சிபிஎஸ்இ-யின் புதிய 3 மொழி பாடத்திட்டம்: R1, R2, R3 மொழிகளை தேர்ந்தெடுப்பது எப்படி? பாடப்புத்தகங்கள் குறித்த முழுமையான விளக்கம்!

தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய 3 மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை (Middle Stage) பயிலும் மாணவர்களுக்கான இந்த புதிய மொழித் திட்டம் எவ்வாறு செயல்படும்? R1, R2, R3 ஆகிய மொழிகளை எவ்வாறு தேர்வு செய்வது? பாடப்புத்தகங்கள் என்ன? என்பது குறித்த முழுமையான வழிகாட்டுதல்களைக் காணலாம்.
3 மொழி பாடத்திட்டம் என்றால் என்ன?
புதிய விதிகளின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தது மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், இந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக (Native Indian Languages) இருக்க வேண்டும். இந்த முறை 2026- 27ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பு, 2027ஆம் ஆண்டு 6, 7ஆம் வகுப்புகளுக்கும் என அறிமுகம் செய்யப்பட்டு, 2030ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு வரை மும்மொழி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
R1, R2, R3 மொழிகளின் விளக்கம்
பள்ளிகளில் கற்பிக்கப்படும் இந்த மூன்று மொழிகளும் R1, R2, R3 என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- R1 (முதல் மொழி / பயிற்று மொழி):
இது பெரும்பாலும் மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் (பிராந்திய) மொழியாக இருக்கும். பள்ளிகளில் மற்ற பாடங்களைக் கற்பதற்கான பயிற்று மொழியாகவும் இதுவே செயல்படும். - R2 (இரண்டாம் மொழி):
முதல் மொழியாக (R1) தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி அல்லாத, வேறு எந்தவொரு மொழியையும் R2 ஆகத் தேர்ந்தெடுக்கலாம். இது ஆங்கிலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியாகவோ இருக்கலாம். - R3 (மூன்றாம் மொழி):
R1 மற்றும் R2 ஆகிய இரண்டிலும் இடம்பெறாத, முற்றிலும் புதிய ஒரு மொழியை R3 ஆகப் படிக்க வேண்டும். இது மற்றொரு இந்திய மொழியாகவோ அல்லது ஒரு வெளிநாட்டு மொழியாகவோ இருக்கலாம். (உதாரணமாக: ஒரு மாணவர் R1 ஆக தமிழையும், R2 ஆக ஆங்கிலத்தையும் தேர்வு செய்தால், R3 ஆக வேறு ஒரு இந்திய மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்).
மொழிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
இந்த மூன்று மொழிகளையும் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் மாநில அரசுகள், பள்ளிகள் மற்றும் மாணவர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகம் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் கட்டாயப்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் இருப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப பள்ளிகளே மொழிகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
பாடப்புத்தகங்கள்
புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையிலான புதிய மொழிப் பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இருப்பினும், சிபிஎஸ்இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுத் தயாரிக்கப்பட்டிருந்தால், மாநில அரசுகள் வெளியிடும் பாடப்புத்தகங்களையோ அல்லது தனியார் பதிப்பகங்கள் தயாரிக்கும் புத்தகங்களையோ கூட பள்ளிகள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கற்பித்தல் முறையில் மாற்றம்
இந்த புதிய பாடத்திட்டத்தின் மூலம் மொழியைக் கற்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதாவது, வெறும் மொழி இலக்கணத்தை மட்டும் மனப்பாடம் செய்யும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, அந்த மொழியை நடைமுறையில் பயன்படுத்திப் பேசுதல், எழுதுதல் மற்றும் சரளமாகத் தொடர்பு கொள்ளுதல் ஆகிய திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
திட்டத்தின் நோக்கம்
மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்ப்பதே இந்த 3 மொழிப் பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் மீதான புரிதலும் மரியாதையும் மாணவர்களிடம் அதிகரிக்கும் என கல்வி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























