நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தத்தில் அதிரடி மாற்றம்- மாணவர்களுக்கு என்ன பயன்?
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் முறையில் அதிரடி மாற்றம்! ஆசிரியர்கள், மாணவர்கள் கவனத்திற்கு...

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை (பிப்ரவரி 17) தொடங்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதில் மிகப் பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026-27 கல்வியாண்டு முதல் 'ஆன்- ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking - OSM) என்ற புதிய டிஜிட்டல் முறை அமலுக்கு வரவுள்ளது.
ஏப்ரல் 10 வரை தேர்வுகள்
2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறுகின்றன. இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்த புதிய டிஜிட்டல் முறையே நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய முறை எப்படி செயல்படும்?
மாணவர்கள் வழக்கம்போல காகிதத்தில்தான் தேர்வு எழுதுவார்கள். ஆனால், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, பாதுகாப்பான ஆன்லைன் தளத்தில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள் விடைத்தாள் கட்டுகளைக் கையில் வைத்துத் திருத்துவதற்குப் பதிலாக, கணினித் திரையில் விடைத் தாள்களைப் பார்த்து மதிப்பெண்களை வழங்குவார்கள்.
ஆசிரியர்களுக்கு என்ன மாற்றம்?
- ஆசிரியர்கள் இதற்காகத் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை; தங்கள் பள்ளிகளிலிருந்தே மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ளலாம்.
- ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனிப்பட்ட 'யூசர் ஐடி' மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
- ஆசிரியர்களின் திருத்தும் வேகம் மற்றும் தரம் கண்காணிக்கப்படும். தலைமைத் தேர்வாளர்கள் அவ்வப்போது மாதிரிக்காகச் சில விடைத்தாள்களை மறுஆய்வு செய்வார்கள்.
- இதைச் செயல்படுத்துவதற்குமுன், ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சியும், முன்னோட்டச் சோதனைகளும் நடத்தப்படும்.
மாணவர்களுக்கு என்ன பயன்?
- விரைவான தேர்வு முடிவுகள்: டிஜிட்டல் முறை என்பதால், மதிப்பீட்டுப் பணி மிக வேகமாக நடக்கும். முன்பு 12 நாட்கள் ஆகும் பணி, இனி 9 நாட்களில் முடிவடையும். இதனால் முடிவுகள் சீக்கிரம் வெளியாகும்.
- கையெழுத்து மிக முக்கியம்: ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைத் திரையில் பார்த்துத் திருத்துவதால், கையெழுத்து தெளிவாகவும், அடித்தல் திருத்தல் இன்றியும் இருக்க வேண்டியது மிக அவசியம். புரியாத கையெழுத்து மதிப்பெண்களைப் பாதிக்கலாம்.
- மறுகூட்டல் தேவைப்படாது: கணினியே மதிப்பெண்களைக் கூட்டுவதால், கூட்டல் பிழைகள் வர வாய்ப்பில்லை. எனவே, தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்பு முறை ரத்து செய்யப்படலாம்.
வேறு என்ன பலன்கள்?
விடைத்தாள் கட்டுகளைப் பல இடங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவு மற்றும் நேரம் மிச்சமாகும். மனிதத் தவறுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
























