10, 12ஆம் வகுப்பு மாணவர்களே.. வெளியான முக்கிய அறிவிப்பு- ஹால் டிக்கெட்டை நீங்களே பெறமுடியாது!
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இதைப் பெறுவது எப்படி? காணலாம்.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. எனினும் இதை மாணவர்கள் நேரடியாக இணையத்தில் பெற முடியாது, பள்ளிகள் வாயிலாக வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. இதற்கான ஹால் டிக்கெட் அண்மையில் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ parikshasangam.cbse.gov.in என்ற இணைய முகவரியில் உள்ள பரிக்ஷா சங்கம் போர்ட்டலில் இதை வெளியிட்டுள்ளது.
எனினும் இதை மாணவர்கள் தாங்களாகவே பெற முடியாது. பள்ளி லாகின்களில் மட்டுமே பெற முடியும்..
பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்?
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள், தங்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, லாகின் செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்களே ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து, கையொப்பம் இட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கும் பணியைச் செய்வார்கள்.
மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டில் பெயர், பதிவு எண், வகுப்பு, தேர்வு ஆண்டு, பாட விவரம், தேர்வு மையத்தின் விவரம், முகவரி, தேர்வு தேதிகள், தேர்வு நாளின் விதிமுறைகள் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதேபோல தலைமை ஆசிரியரின் கையெழுத்து மற்றும் பள்ளி முத்திரை ஆகியவையும் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது முக்கியம் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. ஒருவேளை அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின், உடனடியாக பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு சரிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தனித்தேர்வர்களுக்கு (Private Candidates) ஏற்கனவே கடந்த ஜனவரி 19, 2026 அன்றே ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவலைப் பெற: https://www.cbse.gov.in/
























