Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Gnanavel Babu Anna University: அண்ணா பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பேராசிரியர் ஞானவேல் பாபு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஞானவேல் பாபு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் ஆணையரிடம் புகார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று (மார்ச் 26) மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தனக்கு நேரிலும் போனிலும் பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் தனது ஏழ்மையைப் பயன்படுத்தி பண உதவிகள் செய்து இத்தகைய இழிசெயலில் அவர் ஈடுபட்டதாகவும் மாணவி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
மேலும் தனக்கும் தனது தோழிகளுக்கும் இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மாணவி குற்றம் சாட்டி இருந்தார்.
உத்தரவிட்ட அருண் ஐபிஎஸ்
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட கோட்டூர்புரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸாருக்கு, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து கோட்டூபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் முதற்கட்டமாக பாலியல் புகார் வழக்கில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஞானவேல் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























