Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
விரைவில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பிரேர்னா நினைத்தபோது கிரண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பிரேர்னாவை சந்திப்பதை தவிர்த்தும் வந்துள்ளார்.

பெங்களூருவில் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்த காதலனை, இளம்பெண் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தெற்கு பெங்களூருவில் உள்ள அஞ்சனபுராவில் பிரேர்னா என்ற இளம்பெண் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கம்யூனிகேஷன் சென்டரில் பணியாற்றி வருகிறார். இதேநிறுவனத்தில் கிரண் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் முளைத்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
விரைவில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பிரேர்னா நினைத்தபோது கிரண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பிரேர்னாவை சந்திப்பதை தவிர்த்தும், அவரது அழைப்புகளை எடுக்காமலும் இருந்துள்ளார். இதுதொடர்பாக கிரணிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பிரேர்னா ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தார்.
தன்னை காதலித்து நம்பிக்கை கொடுத்து விட்டு தற்போது திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிந்ததும், புறக்கணிக்கும் கிரணுக்கு தக்க பாடம் புகட்ட பிரேர்னா எண்ணினார். அதன்படி அஞ்சனபுராவில் உள்ள தனது வீட்டிற்கு கிரணை அழைத்துள்ளார். அம்மா மற்றும் சகோதரன் வெளியில் சென்றிருப்பதாகவும் நாம் தனிமையில் நேரம் செலவிடலாம் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி கிரணும் வீட்டுக்கு செல்ல இருவரும் சிறிது நேரம் பேசியுள்ளனர். அப்போது தன்னிடம் லவ் ப்ரோபோஸ் செய்ய ஒரு புதுத்திட்டம் இருப்பதாக பிரேர்னா கூறியுள்ளார்.
என்னவென கிரண் கேட்க, அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து முதலில் கண்களை கட்டியுள்ளார். பின்னர் கயிறு கொண்டு நாற்காலியில் அவரை கட்டிப் போட்டுள்ளார். இதனை அனைத்தையும் பிரேர்னா வீடியோவாக பதிவு செய்ய தொடங்கியுள்ளார். கிரண் கட்டிப்போட்டு என்ன செய்யப் போகிறாய் என கேட்டதற்கு வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் ஸ்டைலில் காதலை தெரிவிக்கப் போவதாக பிரேர்னா கூறியுள்ளார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தன்னிடம் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை கிரண் மீது ஊற்றியுள்ளார். அவர் சுதாரிப்பதற்குள் பிரேர்னா தனது காதலனை தீ வைத்துக் கொளுத்தினார். கிரண் உயிருடன் எரிந்த காட்சிகளையும் செல்போனில் வீடியோவாக எடுத்துப் பார்த்துள்ளார்.
பயதரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரேர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரண் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை பிரேர்மா ஒப்புக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















