Chennai: சென்னையில் அதிர்ச்சி.. உள்ளாடையுடன் தூக்கில் தொங்கிய பெண் காவலர்.. நடந்தது என்ன?
திருமண நாள் முதல் சந்தேகம், அடிக்கடி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்த சிலம்பரசன் தற்போது கொலை வரை சென்று விட்டதாக உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் பெண் காவலர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது கணவர் கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் சிலம்பரசன் என்பவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காவல்துறையில் பணியாற்றி வரும் நிலையில் 29 வயதான புவனேஸ்வரி ஆவடி பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அயல் பணியாக எழும்பூர் குற்றப்பிரிவில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இதனிடையே சிலம்பரசனை காதலித்து கடந்த 2024ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தம்பதியினர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இதற்கிடையில் காதல் திருமணம் செய்ததால் தங்கள் இல்லற வாழ்க்கை கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்த புவனேஸ்வரிக்கு எல்லாம் தலைகீழாக அமைந்தது. திருமணமான நாளில் இருந்து சிலம்பரசன் மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் தினமும் மது அருந்து விட்டு வந்து புவனேஸ்வரியை தகாத வார்த்தைகள் பேசி அடித்து சித்ரவதை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இப்படியான நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மது அருந்தி விட்டு வந்த சிலம்பரசன் புவனேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில் புவனேஸ்வரி உயிரிழந்து விட்டதாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால் இது ஒரு கொலை என புவனேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது சம்பவம் நடந்த நாளில் இரவு வீட்டுக்கு வந்த சிலம்பரசன், தனது சொந்த ஊரில் இடம் வாங்க வேண்டியிருப்பதால் தனக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. அதனை உன் பெற்றோரிடம் வாங்கி கொடு என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் புவனேஸ்வரியை அடித்து கொலை செய்து விட்டு தூக்கி தொங்க விட்டுள்ளான். தற்கொலை செய்துக் கொள்பவர்கள் யாராவது அரை நிர்வாண கோலத்தில் உயிரை மாய்த்துக் கொள்வார்களா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
திருமண நாள் முதல் சந்தேகம், அடிக்கடி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்த சிலம்பரசன் தற்போது கொலை வரை சென்று விட்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புவனேஸ்வரி தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.























