Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
Alisa Abdullah: பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளங்குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில், யூட்யூபர் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Alisa Abdullah: பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளங்குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில், தலைமறைவான முக்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சூர்யா கைது
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக பிரமுகரான அலிசா அப்துல்லா புகாரளித்தார். அதில்,”யூடிப்பூர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தன்னைப்பற்றியும் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் திருச்சி சூர்யாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள யூட்யூபர் முக்தாரை தேடி வருகின்றனர்.
கதறி அழுத அலிசா
முன்னதாக நேற்று புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் கண்கலங்கி மனமுடைந்து அழுத அலிசா அப்துல்லா, ”அண்ணாமலை எனக்கு காட்பாதர் போன்றவர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்தார் உடைய இரண்டு மகள்களின் புகைப்படங்களை எடுத்து யாராவது கொச்சைப்படுத்திப் பேசினால் அவர் எப்படி உணர்வார்? அப்போது அவர் யாரிடம் சென்று பாதுகாப்பு கேட்பார்? எனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தவறாக சித்தரிக்கின்றனர். அண்ணாமலையிடம் புகைப்படம் எடுத்து இதுபோன்று பேசச் சொல்லுங்கள்; அவர் அப்படி செய்ய மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அலிஷா, அலிஷா என்று என்னை மட்டுமே குறிவைக்கிறார்கள். இது எனக்கு நல்ல விளம்பரம் என்றாலும் இது எதிர்மறையான விளம்பரம். குழந்தைகள் குறித்து யாரும் பேசக்கூடாது
”நானே செருப்பால் அடிப்பேன்”
எனக்கு பெற்றோர் மற்றும் கணவர் ஆதரவாக இருந்ததால் நான் உறுதியாக இருக்கிறேன். வேறு ஏதேனும் குடும்பமாக இருந்திருந்தால், இந்த விவகாரம் விவாகரத்து வரை சென்றிருக்கலாம். எனவே, உடனடியாக அந்த காணொளியை நீக்க வேண்டும். இதுதொடர்பாக அவதூறு வழக்கு தொடர்வேன். தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். முக்தார் மற்றும் சூர்யா இருவரையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன். முக்தார், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே அவர்களை ஏதாவது செய்வேன். இவர்கள் பெண்களைப் பற்றி மட்டும் தான் பேசுவார்கள். என்னைப் பற்றி ஆபாசமாகவும், என் குழந்தைகளை அண்ணாமலை புகைப்படத்துடன் சேர்த்து கொச்சையாகவும் பேசியுள்ளனர் " என்று ஆவேசமாக பேசினார்.
யார் இந்த அலிசா அப்துல்லா..
பிரபல கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா கடந்த 2022 ஆம் ஆண்டு, அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு கட்சியில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. பிரசவத்திற்காக இவர் கடந்த ஒரு வருடகாலமாக அரசியல் நிகழ்வில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் அவருக்கு பிறந்த குழந்தை குறித்து மிகவும் மோசமாகவும் இழிவாகவும் பேசி வீடியோ வெளியிட்டதாக, திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது புகாரளித்து இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
Before You Go
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?
ட்ரெண்டிங் செய்திகள்






















