திருப்பத்தூரில் அதிர்ச்சி... கதறிய சிறுமிகள்.... இருவர் செய்த கொடூரம் - நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடத்தில் இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு பேர் போக்சோவில் கைது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஈடுபட்டுள்ளார். சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது பெற்றோர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் தாமோதிரன்(60) என்பவரை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
15 வயது சிறுமியிடம் 60 வயது முதியவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆம்பூர் அருகே நடந்த கொடூரம்
இதேபோல், ஆம்பூரில் 6 வயது சிறுமியை பாலாற்றிக்கு அழைத்துச்சென்று பாலியல் சீண்டல் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மளிகைதோப்பு, ரத்னா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இர்ஷாத். இவர் நேற்று, மதுபோதையில் அப்பகுதியில் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடைக்கு அழைத்துச்செல்வதுபோல் தூக்கிக்கொண்டு, அப்பகுதியில் உள்ள பாலாற்றில் புதர் பகுதியில் உள்ள மறைவான பகுதியில் சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்துள்ளார். உடனடியாக சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில், முகமது இர்ஷாத்தை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ சட்டம்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
போக்சோ சட்டத்தின் அம்சங்கள்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.
சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.























