DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
’இளைஞர்களின் பெருவாரியான ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுகவின் பொதுச்செயலாளராக தன்னுடைய ஆஸ்தான நண்பன் அன்பில் மகேஸை கொண்டுவர நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்’

சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்த திமுகவிற்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரில் தோற்றது யாருமே எதிர்பாராத விஷயம். இந்த தோல்விக்கு பின்னர் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவெடுத்தார் ஸ்டாலின். ஆனால், அவரின் முயற்சிக்கு பல சீனியர்களே முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம்
ஜெயித்துவிடுவோம் என்ற மெத்தனத்தில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர் உடன்பிறப்புகள். ஆனால், தோல்வியை ஆராய ஒரு குழுவை அமைத்து அதில் கருத்துகளை பதிவு செய்யச் சொன்னார் ஸ்டாலின். அந்த குழுவிடமும் கண்ணீரும் கம்பளையுமாக பல மாவட்ட செயலாளர்கள் மீது புகாரை தெறிக்கவிட்டனர் திமுகவினர். ஆனால், இப்போது வரை அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக தலைமை இருப்பது கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்திருக்கிறது. திமுகவில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில், அதனை 125ஆக உயர்த்தவும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதே தவிர, அதற்கான உடனடியான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாததும் கட்சியினரை சோர்வடைய வைத்திருக்கிறது.
திமுக தலைமை நிர்வாகிகள் எப்போது மாற்றம்?
அதே நேரத்தில் திமுக தலைமையில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் தோல்விக்கு பொறுப்பேற்க முன்வராத நிலையில், திமுக தலைவரே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால், தலைமை நிர்வாக குழுவில் இருந்தே மாற்றங்களை தொடங்க வேண்டும் என்பதும் உடன்பிறப்புகளின் விருப்பமாக இருக்கிறது. குறிப்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வயது ஆகிவிட்டதால், அந்த முக்கியமான பொறுப்பில் துடிப்பாக செயல்படும் நபரை அமர்த்த வேண்டும் என்று நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார் ?
யாரும் எதிர்பார்க்காத நிலையில், இளைஞர்களின் பெருவாரியான ஆதரவால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருக்கும் விஜயை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முக்கிய பதவிகளையும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் உதயநிதி. ஆனால், அவரின் இந்த எண்ணத்திற்கு டன், டன்காக மண்ணைக் கொட்டி மதில் எழுப்பி வருகிறார்கள் கட்சியின் சீனியர்கள். திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து தானே விலகுவதாக துரைமுருகனை அறிக்கை கொடுக்க வைத்து, அந்த இடத்திற்கு டி.ஆர்.பாலுவை கொண்டுவர சீனியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், உதயநிதியோ அந்த முக்கியமான பொறுப்புக்கு தன்னுடைய நண்பனான அன்பில் மகேஸை கொண்டுவந்து கட்சியை இளைஞர்களுக்கானதாக மாற்ற நினைக்கிறார். ஆனால், அன்பில் மகேஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதை கே.என்.நேரு சற்றும் விரும்ப மாட்டார் என்பதால் அவருக்கு பதில் பட்டியலினத்தை சேர்ந்த ஆ.ராசாவை அமர வைக்கலாம் என்றும் மாற்று ஐடியாவோடு திமுக தலைவரை அணுகியிருக்கிறார் உதயநிதி என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
கட்சியின் பொருளாளரும் மாற்றமா ?
அதே நேரத்தில் பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என கட்சியின் முக்கிய கட்டமைப்பிலும் மாற்றங்கள் செய்வது குறித்தும் நடைபெற்ற ஆலோசனையில் பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கட்சியின் பொருளாளராக வர எ.வ.வேலுவிற்கும் நேருவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படும் நிலையில், கட்சியின் முதன்மை செயலாளராக ஆக கனிமொழி முயற்சித்து வருகிறார்.
அதோடு, துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இந்த முறை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலினை கொண்டுவருவதற்கான முயற்சிகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
எப்போது நடக்கும் மாற்றங்கள் ?
ஆனால், மாவட்டச் செயலாளர் தொடங்கி கட்சி தலைமை நிர்வாகிகள் வரையிலான மாற்றங்கள் எப்போது நடைபெறும் என்ற எந்த பெரும் எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் இருக்கிறது. விஜயை தொடர்ந்து அண்ணாமலையும் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அனைவரையும் எதிர்த்து அரசியல் செய்யவும், களத்தில் போராட்டங்களை உள்ளிட்ட கூட்டங்களை முன்னெடுத்து கட்சியினரை உற்சாகப்படுத்தவும் இந்த மாற்றங்கள் எல்லாம் விரைவில் நிகழவேண்டும் என உடன்பிறப்புகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















