போலீஸ் போடும் பிளானை ஒட்டு கேட்டு தப்பி வந்த குற்றவாளி; மலையாள சினிமாவை மிஞ்சிய திரில்லர் - சிக்கியது எப்படி?
திருப்பத்தூர் மூதாட்டி கொலையில் மாஸ்டர் பிளான் போட்டு போலீசார் கண்களிலே விரலை விட்டு ஆட்டி வந்த தூய்மை பணியாளர் கைது.

திருப்பத்தூர்: க்யூ பிரான்ச் அலுவலகம் முன்பு பழம் விற்பனை செய்து வந்த மூதாட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் போலீசார் கண்களிலே விரலை விட்டு ஆட்டி வந்த தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார். போலீஸ் போடும் பிளானை ஒட்டு கேட்டு தப்பி வந்ததாக வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் மனைவி சந்திரா (68) கணவன் உயிரிழந்த நிலையில், திருப்பத்தூர் கியூ பிரான்ச் அலுவலகம் முன்பு சிறிய அளவிலான பழக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர் கடந்த 27 ஆம் தேதி அருகே உள்ள முட்டை குடோனில் வெட்டுப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
இந்த நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் அதிக துர்நாற்றம் வீசியதன் காரணமாக இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல்நிலத்தில் தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த 27 ஆம் தேதி முதல் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
அப்போது செல்போன் டவர் லொகேஷனை வைத்து 15 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை நெருங்கினர். அப்போது அதே கியூ பிரான்ச் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ப.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமு (45) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
ராமு போலீசாரிடம் கூறுகையில், பழ வியாபாரி சந்திரா என்பவரிடம் பணம் கடனாக வாங்கி இருந்ததாகவும் அதன் காரணமாக அவ்வப்போது தகாத வார்த்தையால் பேசி தொந்தரவு செய்து வந்ததாகவும் மேலும் தனக்கு அதிக கடன் இருப்பதால் சந்திரா போட்டிருந்த நகையை அடையவும் திட்டம் போட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் தேதி இரவு அதிக மழை பெய்தபோது பின்பு ஆள் இல்லாத நேரமா பார்த்து மூதாட்டி தங்கி இருந்த முட்டை குடோனுக்குச் சென்று அவரைக் கத்தியால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு கியூ பிரான்ச் பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்ததாகவும் மூதாட்டி காதிலிருந்த 6 கிராம் தங்க நகையை பறித்தது வந்ததாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மூதாட்டி போட்டிருந்த துணி மற்றும் சுருக்குப்பை மேலும் மூதாட்டியை வெட்டி படுகொலை செய்த கத்தி ஆகியவற்றை கியூ பிரான்ச் பழைய கட்டிடத்தில் இருந்து எடுத்துக் கொண்டு இரண்டு நாட்கள் கழித்து சிசிடிவி கேமரா இல்லாத வழியாகச் சென்று வெங்களாபுரம் ஏரியில் வீசி சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், கியூ பிரான்ச் அலுவலகத்தில் போலீசார் கொலை குறித்த நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்கிறார்கள் எனவும் ஒட்டு கேட்டு அதன்படி பக்கவாக மாஸ்டர் ப்ளான் போட்டு இந்நாள் வரை தப்பி வந்ததாகவும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
மேலும், மூதாட்டி காதில் இருந்து பறித்த 6 கிராம் கம்மலை பேராம்பட்டு பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நண்பர் மூலமாக அடமானம் வைத்ததாகவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட தனிப்படை போலீஸசாருக்கு ஒரு நிமிடம் தலையை சுற்றியது. க்யூ பிரான்சில் வேலை செய்யும் தூய்மை பணியாளருக்கே க்யூபிரான்ச் போலீசார் போல மூளை வேலை செய்துள்ளதாகவும் ஆச்சரியப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் ராமுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















