பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு நகை திருட்டு : தஞ்சை அருகே பரபரப்பு
கடந்த 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் பூட்டியிருந்த வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பாலகிருஷ்ணா நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார் (50). இவர் கடந்த 31 ஆம் தேதி சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு மயிலாடுதுறையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றார்.
பின்னர் நேற்று 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி விளக்கு மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து செந்தில்குமார் தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூட்டப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டு இதுபோன்று ஒரு கும்பல் செயல்படுகிறது. இந்த கும்பலை கண்டுபிடித்து உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















