கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் கைது
நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெட்டி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த் துறையினர் மரங்களைப் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி, ஒரு கோடி ரூபாய் பறித்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டரை நேற்று இரவு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குலசேகரநல்லுாரில், கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை அரசு கையகப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. இதில், கும்பகோணம், ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் (68) என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு பிறகு, இந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெட்டி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த் துறையினர் மரங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதை ,அரியலுார் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் நெப்போலியன் (45), தான் இன்ஸ்பெக்டர் எனவும், கலெக்டர் தனது உறவினர் எனவும், பேசி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வைப்பதாக கூறி ரூ. 1 கோடி பெற்றுள்ளார். மேலும், அடிக்கடி ரவிசந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இது தொடர்பாக, தஞ்சாவூர் எஸ்.பி.,அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்டக் குற்றப் பிரிவுக்குக், எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.
இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் நெப்போலியனை நேற்று இரவு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















