கும்பகோணம் அருகே சமையல் மாஸ்டர் வீட்டில் துணிகரம்! 34 பவுன் நகைகள் கொள்ளை, அதிர்ச்சியில் போலீசார்
பீரோவில் இருந்த 34 நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சமையல் மாஸ்டர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை குறிச்சி கார்டன் பகுதியை சேர்ந்த பாப்பையன் என்பவரின் மகன் பாஸ்கர் (48). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி தனது தந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்ததால் வீட்டை பூட்டிக் கொண்டு பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் திருவையாறு சென்று விட்டார். பின்னர் 29ம் தேதி மதியம் சோழன்மாளிகையில் உள்ள தனது பாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடன் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 34 நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உடன் பாஸ்கர் இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் பட்டீஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.
மேலும் இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே போல் மோப்பநாய் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்





















