படிக்க மாட்டாயா கேட்ட பாட்டி..? வெட்டிக்கொன்ற பேரன்..மறைத்து வைத்த தாய்
மகன் கொலை செய்து விட்டான் என்பதை தெரிந்து கொண்ட தாய் கிருஷ்ணபிரியா, மகனை அழைத்துக் கொண்டு காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு அழைத்து சென்று மறைத்து வைத்தது தெரியவந்தது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள மதுரையங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னதாயி. இவர் கடந்த 27ம் தேதி காலையில் வீட்டில் தலையில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் மூதாட்டி சின்னதாயிக்கும் உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள 47 வீடுகளுக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணபிரியா என்பவர் வீடு மட்டும் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். வீட்டை பூட்டிவிட்டு எங்கே சென்றார்? என்ற விசாரணையில், காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இவரது கணவர் கடந்த 15 அண்டுகளுக்கு முன்பே இறந்து போனார். இவரது தம்பி சேதுராஜ், அரியானூர் பகுதியில் தங்கியிருந்து டாக்டருக்கு படித்துள்ளார். இதனால் கிருஷ்ணபிரியா, 17 வயதான மகன், மகளுடன் அங்கு வந்து தங்கியுள்ளார். அப்போது அரியானூர் பகுதியில் ஓட்டல் ஒன்றை தொடங்கி நடத்தி வருவதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் இவரது மகனான 17 வயதான பிளஸ் 1 மாணவன்தான் மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அச்சிறுவன், ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளிக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அவரை அங்கும், இங்குமாக 4 பள்ளியில் சேர்த்துள்ளனர். செல்போனில் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். கொலை விளையாட்டுக்களை அதிகமாக பார்த்து விளையாடி வந்ததும் தெரியவந்தது. இவர் ஊர் சுற்றிவந்ததை அந்த மூதாட்டி அவ்வப்போது கண்டித்துள்ளார். பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை அவர் கண்டிப்பாராம். பள்ளிக்கூடம் போய் படிக்க மாட்டாயா? என கேட்டு, அவ்வழியாக சென்ற அச்சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மூதாட்டி சின்னதாயி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். வீட்டின் முன்பு பாட்டி கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து சென்ற அச்சிறுவன், மூதாட்டியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். மகன் கொலை செய்து விட்டான் என்பதை தெரிந்து கொண்ட தாய் கிருஷ்ணபிரியா, மகனை அழைத்துக் கொண்டு காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு அழைத்து சென்று மறைத்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் சிறுவனையும், கொலையை மறைத்ததாக தாய் கிருஷ்ணபிரியாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தாயை சேலம் பெண்கள் சிறையில் அடைத்த நிலையில், மகனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதற்கிடையில் மூதாட்டியை கொலை செய்வதற்கு காரணம், தன்னை படிக்குமாறு கூறியதால் தான் கோபத்தில் வெட்டி கொன்றாரா? அல்லது செல்போனில் கொலை சம்பவங்களை பார்த்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டாரா? என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

