பேராசிரியரிடம் ரூ.54 லட்சம் மோசடி, வாலிபர் கைது! அதிர்ச்சி தகவல்
ஆன்லைன் பங்குசந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி பேராசிரியரிடம் ரூ.54.42 லட்சம் மோசடி.

புதுச்சேரி: ஆன்லைன் பங்குசந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் ஆசை வார்த்தைகளை கூறி பேராசிரியரிடம் ரூ.54.42 லட்சம் மோசடி செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜகுமாரன். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி பேராசியரான இவர், முகநூல் பக்கத்தில் பங்குசந்தை விளம்பரம் ஒன்றை பார்த்து, அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வாட்ஸ்அப் குருப்பில் சேர்ந்துள்ளார். இதையடுத்து ராஜகுமாரனை, மஞ்சு பட்சிசா என்பவர் வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு டெலிகிராம் குரூப்பில் சேர்த்து, பங்குசந்தையில் 83 சதவீதம் லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
மேலும், எஸ்பிஐஎஸ் என்ற ஆப் லிங்க்கையும் அனுப்பி பதிவிறக்கம் செய்து முதலீடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதனை உண்மை என நம்பிய ராஜகுமாரன் அதில் ரூ.54.42 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். இதையடுத்து அவர் பதிவிறக்கம் செய்த செயலியில் லாபத்துடன் சேர்த்து ரூ.96 லட்சத்து 3 ஆயிரத்து 669 இருப்பதாக காட்டியுள்ளது. ஆனால் அந்த பணத்தை ராஜகுமாரன் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. அதன் பின்னர் தான் அவருக்கு அது போலி பங்குசந்தை என தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த ராஜகுமாரன் உடனடியாக இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜிபுர் ரகுமான் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அசாம் விரைந்த சைபர் கிரைம் போலீசார், அஜிபுர் ரகுமானை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று புதுச்சேரி அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் இருப்பதும், அவரது சசோதரர் வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து ஒரு சிம்கார்டு, 3 செல்போன்கள், வைபை இன்டர்நெட், 2 லேப்டாப், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தனியார் வங்கியின் பெயரில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போலி வங்கி செயலியை பதிவிறக்கம் செய்த நபர் ரூ.1.23 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபரின், வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தனியார் வங்கியின் பெயரில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போலி மொபைல் செயலி வந்துள்ளது. அதனை நம்பி, அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கியின் விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்து ஏமாற்றியுள்ளார்.
ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம்
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர், வீட்டிலிருந்த படி ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக 90 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்து, கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வந்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
கவுண்டம்பாளையத்தை ஆண் நபர் ஒருவர், ஆன்லைனில் இந்தியா விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரத்தை பார்த்து உள்ளார். அந்த விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசிய நபர், தன்னை இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிர்வாகி போல், அறிமுகப் படுத்தி கொண்டுள்ளார். அதில், தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும், அதற்கான விண்ணப்பம் மற்றும் செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பி மர்ம நபருக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி இழந்துள்ளார். இதுபோல் மூன்று பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





















