"இனி இந்து மதத்தைத்தான் பேசணும்.." - முதியவரின் தொப்பியை கழற்றி மிரட்டிய நபர் சிறையில் அடைப்பு!
மயிலாடுதுறை அருகே முதியவரை வழிமறித்து, விபூதி பூசி, காவி துண்டு அணிவித்து கொலை மிரட்டல் விடுத்தாக இந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதிகுமரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய முதியவரைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு விபூதி பூசி, காவி துண்டு அணிவித்து அச்சுறுத்திய இந்து அமைப்பின் நிர்வாகியைப் பெரம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதப் பிரச்சாரமும் வாக்குவாதமும்
மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிட்டப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் (66). இவர் கடந்த சில ஆண்டுகளாகத் தனது மதம் சார்ந்த கருத்துக்களைப் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் துண்டுப் பிரசுரங்களை (நோட்டீஸ்) விநியோகிப்பதையும், மதப் பிரசங்கம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பண்டாரவடை கிராமத்தில் ஷேக் அலாவுதீன் தனது மதப் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக, அந்த கிராமத்தில் உள்ள உடையார் தெரு பகுதியில் அவர் நோட்டீஸ்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிகுமரன் (48) என்பவர், அலாவுதீனின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜோதிகுமரன் இந்து புரட்சி முன்னணி என்ற அமைப்பின் முக்கிய நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
அத்துமீறலும் அநாகரிகச் செயலும்
"இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஏன் இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்கிறாய்?" எனக் கேட்டு ஜோதிகுமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் விரும்பத்தகாத செயலாக மாறியுள்ளது.
ஜோதிகுமரன் திடீரென ஷேக் அலாவுதீன் தலையில் அணிந்திருந்த தொப்பியைப் பலவந்தமாகக் கழற்றி, தான் வைத்திருந்த விபூதியை எடுத்து ஷேக் அலாவுதீனின் நெற்றியில் பூசி, காவி துண்டை அலாவுதீனின் கழுத்தில் அணிவித்து "இனிமேல் இங்கே இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் பேசக்கூடாது, இந்து மதத்தைத்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும்" என கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த முதியவர் ஷேக் அலாவுதீன், உடனடியாக அங்கிருந்து வெளியேறி பெரம்பூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துப் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை நடவடிக்கை: 6 பிரிவுகளில் வழக்கு
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்துப் பெரம்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஷேக் அலாவுதீன் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் ஜோதிகுமரன் மீது
* 296(b) மத வழிபாட்டுக்கூட்டம் அல்லது மதச் சடங்குகளில் இடையூறு விளைவித்தல்
*196(1) வெவ்வேறு குழுக்களிடையே மதம், இனம் அடிப்படையில் பகைமையை உருவாக்குதல்
*299 மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே செயல்படுதல்.
*352 அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் அவமதித்தல்.
* 354 மத வழிபாட்டுத் தலத்தையோ அல்லது புனிதப் பொருளையோ அவமதித்தல்.
*351(3) கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட கடுமையான 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக முயன்ற ஜோதிகுமரனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
நீதிமன்றக் காவல் மற்றும் சிறை
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜோதிகுமரன், திருச்சம்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜோதிகுமரன் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூகப் பதற்றம் மற்றும் பாதுகாப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். "யார் வேண்டுமானாலும் தனது மதத்தைப் பரப்ப இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. ஆனால், ஒருவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து மாற்றொரு மத அடையாளத்தை அவர் மீது திணிப்பது சட்டப்படி குற்றம்" எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பண்டாரவடை மற்றும் வழுவூர் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.























