ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
மயிலாடுதுறை உணவகத்தில் கூடுதல் சாஸ் கேட்ட விவகாரத்தில், 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில், கூடுதல் ‘சாஸ்’ (Sauce) கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, ஊழியர்கள் மீதான பயங்கரத் தாக்குதலாக மாறியுள்ளது. ரத்தம் வழிய வழிய ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் ‘சாஸ்’ கேட்டதில் தொடங்கிய மோதல்
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செந்தில் என்பவர் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் ‘சிக்கன் ரைஸ்’ ஆர்டர் செய்து சாப்பிட்டபோது, அதற்குத் தொட்டுக்கொள்ள கூடுதல் சாஸ் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, சிக்கன் ரைஸில் சிக்கன் துண்டுகள் குறைவாக இருப்பதாகக் கூறி அந்த இளைஞர் மீண்டும் உணவக ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் தலையிட்டு அந்த இளைஞரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
கும்பலாக வந்து ரத்தவெறித் தாக்குதல்
உணவகத்தை விட்டுச் சென்ற அந்த இளைஞர், சிறிது நேரத்திலேயே தனது கூட்டாளிகள் ஆறு பேருடன் மீண்டும் உணவகத்திற்குத் திரும்பினார். அவர்கள் மறைத்து வைத்திருந்த கட்டைகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவக ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..! pic.twitter.com/e3CHSpBNOH
— JAGANNATHAN (@Jaganathan_JPM) April 28, 2026">
குறிப்பாக, உணவு தயாரிக்கும் மாஸ்டரான ஆரூன் என்பவரை அந்தக் கும்பல் குறிவைத்துத் தாக்கியது. இதில் ஆரூனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிய வழிய அவர் அலறியும், சற்றும் இரக்கமின்றி அந்தக் கும்பல் அவரை மீண்டும் மீண்டும் தாக்கியது. அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தடுக்க முயன்றும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்தக் கும்பல் வன்முறையைத் தொடர்ந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
வெளியான சிசிடிவி: அதிர்ச்சியில் பொதுமக்கள்
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் முழுப் பின்னணியும் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரத்தம் சொட்டச் சொட்ட ஊழியர் தாக்கப்படும் காட்சிகளும், அந்தக் கும்பலின் ரவுடித்தனமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறையின் மெத்தனப்போக்கு? - சர்ச்சையும் குற்றச்சாட்டுகளும்
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் என்பது 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு உள்ள ஒரு முக்கியப் பகுதி. இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த இடத்தில், ஒரு கும்பல் புகுந்து ரத்தவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், சிசிடிவி காட்சிகளில் ஆறு பேர் தாக்கும் காட்சிகள் தெளிவாக உள்ள நிலையில், காவல்துறையினர் அரவிந்த் என்பவரை மட்டும் பிரதானமாகச் சேர்த்து, மொத்தம் இருவர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ள நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதும், வழக்கை நீர்த்துப்போகச் செய்வதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உணவக உரிமையாளர்கள் கோரிக்கை
"உணவு கேட்டு வரும் நபர்களுக்குச் சேவை செய்யும் ஊழியர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" எனப் பகுதி உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தப்பியோடிய மற்ற நபர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இருப்பினும், முக்கியக் குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது மயிலாடுதுறை வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























