அன்று லட்சம்.. இன்று கோடிக்கணக்கில் மோசடி.. அமிதாப் நிகழ்ச்சி பங்கேற்ற பெண் சம்பவம்!
முறைகேடு புகார் ஒன்றில் கைது செய்யப்பட்ட அமிதா சிங் தோமர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசு வென்றவர்.

மத்தியப்பிரதேசத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் வெள்ள நிவாரண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்ட வட்டாட்சியராக அமிதா சிங் தோமர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பரோடா தாலுகாவில் 2021ம் ஆண்டு நடைபெற்றதாக சொல்லப்படும் முறைகேடு புகார் ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமிதா சிங் தோமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் ஷிவ்புரி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பரோடா துணைப் பிரிவு காவல் அதிகாரி அவ்னீத் சர்மா, குவாலியரின் சந்திரவாட்னி நாக்காவில் உள்ள வீட்டில் அமிதா சிங் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது விஜய்ப்பூர் வட்டாட்சியராக பதவி வகித்து வந்த நிலையில் அதிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அமிதா சிங் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அவை நிராகரிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2021ம் ஆண்டு ஷியோபிர் மாவட்டத்தின் பரோடாவில் வட்டாட்சியராக பணியாற்றினார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முழு மோசடிக்கும் அவரே மூளையாக செயல்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெள்ள நிவாரண நிதியை சுருட்டுவதற்காக ஒரு போலிப் பட்டியலைத் தயாரித்து இழப்பீடு வழங்கியதாக அமிதா சிங் தோமர் மீது குற்றச்சாட்டு நிரூபணமானது.
அந்த பட்டியலில் இருந்த பெயர்கள் யாரும் உண்மையில் கிடையாது என்பது தெரிய வந்தது. இந்த மோசடியில், வட்டாட்சியர் அமிதா சிங் மற்றும் சுமார் 25 பட்வாரிகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு நெட்வொர்க் அமைத்து செயல்பட்டனர். ஆரம்பத்தில் தங்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்தனர். அதன்பின்னரே அந்த பெயர் பட்டியல் வெளியானது. இந்த வழக்கில் அமிதா சிங் தோமர் பல நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார்.
அமிதா சிங் கடந்த 2003ம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்தார். பின்னர் 2011ல் வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றார். அமிதாவின் கணவர் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார். தனது 14 ஆண்டுகால பணியில் அமிதா சிங் தோமர் 25 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். சமீபத்தில் தான் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நியாயம் கேட்டு கடிதம் எழுதினார். அதேசமயம் அப்போதைய மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு ட்வீட் ஒன்றை போட்டு வேண்டுகோள் விடுத்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய கௌன் பனேகா குரோர்பதி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாய் வென்று தேசிய அளவில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.























