![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பண்ணை வீட்டுத் தோட்டத்தில் 5 எலும்புக்கூடுகள்.. போலீசாருக்கு தலைசுற்ற வைத்த கொலை வழக்கு!
காணாமல் போனதாகக் கூறப்படும் 5 பேரின் உடலைத் தேட ஆரம்பித்தனர். சுமார் 10 அடி ஆழம் தோண்டி பண்னை நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
![பண்ணை வீட்டுத் தோட்டத்தில் 5 எலும்புக்கூடுகள்.. போலீசாருக்கு தலைசுற்ற வைத்த கொலை வழக்கு! Incident in which 5 members of the same family were killed and buried at the farm house in madhya pradesh பண்ணை வீட்டுத் தோட்டத்தில் 5 எலும்புக்கூடுகள்.. போலீசாருக்கு தலைசுற்ற வைத்த கொலை வழக்கு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/7daa41d5afe4799fe389496f3c504392_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்தியப்பிரதேசம் நெமாவர் பகுதியில் உள்ள பண்ணை நிலத்தில் புதைக்கப்பட்ட 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் நெமாவர் பகுதியில் சுரேந்திர சௌகான் என்பவருக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று உள்ளது. இங்கு மோகன்லால் காஸ்டின் குடும்பத்தினர் தங்கி பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் தான் மோகன்லாலின் மனைவி மம்தா, மகள்கள் ரூபாலி (21) மற்றும் திவ்யா (14), பவன் (14), பூஜா (15) ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பாக காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையிலதான் பண்ணை நிலத்தில் வேலைசெய்யும் ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகத்துக்குள்ளான நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போதுதான் காணாமல் போனதாகக் கூறப்படும் 5 பேரையும் கொலை செய்து விட்டதாகவும், அவர்களை பண்ணை நிலத்தில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் ஜேசிபி உதவியுடன் காணாமல் போனதாகக் கூறப்படும் 5 பேரின் உடலைத் தேட ஆரம்பித்தனர். சுமார் 10 அடி ஆழம் தோண்டி பண்ணை நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கும்பொழுது, பண்ணை நில உரிமையாளர் சுரேந்திர சௌகானும், ரூபாலி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சுரேந்திர சௌகான் வேறு பெண்ணுடன் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக வந்த தகவலையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். மேலும் இதனையடுத்து ரூபாலி சமூக வலைத்தளத்தில் சுரேந்திர தான் நான் திருமணம் செய்யப்போகும் நபர் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, பண்ணை நில உரிமையாளர் சுரேந்திர சௌகான் ஏற்பாடு செய்து வரும் திருமணத்திற்கு இடையூறாக இருந்துள்ளது. எனவே இதனை நீக்குவதற்கு முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை என கூறப்படும் நிலையில்தான் திருமணம் குறித்து பேசுவதற்காக ரூபாலியின் குடும்பத்தினரை பண்ணை வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளார்.
அப்பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றிய நிலையில் தான், ஆத்திரத்தில் தனது உதவியாளர்களின் துணையோடு ரூபாலி உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேரை கொலை செய்துள்ளார் சுரேந்திர சௌகான். இதோடு மட்டுமின்றி, யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக பண்ணை நிலத்தில் சுமார் 10 அடி ஆழம் தோண்டி புதைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பாக கொலை செய்யப்பட்ட ரூபாலியின் செல்போனை ஊழியர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நெட்வொர்க்கினை வைத்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும், கொலை செய்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் தெளிவாக இருப்பதால் நிச்சயம் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மத்தியப்பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் ஓரே குடும்பத்தினைச்சேர்ந்த 5 பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)