ரூ.8 கோடி மெத்தம்பெட்டமைன் சிக்கியது... புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சி
புதுக்கோட்டை வழியாக இலங்கைக்குப் படகு மூலமாக போதைப்பொருட்களை அலெக்ஸ் கடத்த இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

தஞ்சாவூர்: இலங்கைக்கு புதுக்கோட்டை வழியாக படகு மூலம் கடத்தப்பட இருந்த ரூ.8 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாகையை சேர்ந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (32). இவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் களம் இறங்கி அலெக்ஸ் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தனர்.
கடந்த ஒரு வாரகாலமாக அலெக்சிற்கு தெரியாமல் அவர் என்ன செய்கிறார் என்பதை ஷேடோ போலீசார் தீவிரமாக கண்காணிக்க பல தகவல்கள் கிடைத்தன. நாகை வழியாக போதைப் பொருள் கடத்தினால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்று ரூட்டை மாற்றி புதுக்கோட்டை வழியாக இலங்கைக்குப் படகு மூலமாக போதைப்பொருட்களை அலெக்ஸ் கடத்த இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் போதைப்பொருளை கைமாற்றி இலங்கைக்கு அனுப்புவதற்காக புதுக்கோட்டை மேலவிலக்குடியிலிருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தட்டித் தூக்கினர். பின்னர் அவரிடம் தங்களின் பாணியில் விசாரிக்க பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
ஆரம்பத்தில், போலீசாரிடம் உண்மையைச் சொல்லாமல் அலெக்ஸ் டிமிக்கி கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க, வந்தது பாருங்க உண்மைகள். புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்த இருந்தது தெரிய வந்தது. இது மிகவும் விலை உயர்ந்த போதைப்பொருள் ஆகும். மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) என்பதே 'ஐஸ்' எனும் போதைப்பொருளாக அறியப்படுகிறது. இது நூறு சதவீதம் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற (synthetic) போதைப் பொருள் ஆகும். இது படிகங்களாக (Crystals) காணப்படுகின்ற கலப்படமற்ற போதைப்பொருள். இந்த "ஐஸ் போதைப்பொருளை ஒரு தடவை உள்ளெடுத்தால், அந்த நபரை அது அடிமையாக்கி விடும்", இதை உபயோகித்தவருக்கு அதன் செயல்பாடு 2 நாட்கள் வரை உடலில் இருக்குமாம்.
இதை அதிகளவு உள்ளெடுத்தால், மரணம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது. இந்த ஐஸ் போதைப்பொருளை உள்ளெடுக்கும் நபர்களிடம், எவ்வித அறிகுறிகளையும் பெரும்பாலும் காணமுடியாது. இந்த போதைப் பொருள் ஒரு தூண்டியாகச் செயற்படும். உதாரணமாக ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு போன்றவை அதனால் அதிகரிக்கும். உள்ளெடுத்தால் தூக்கம் வராது. இந்த போதைப்பொருளை உபயோகிப்பவர்கள் குறுகிய காலத்துக்குள் மனநோய்க்கு ஆளாகுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இந்த போதைப்பொருளை எடுப்பவருக்கு நிஜமற்ற அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்துமாம். இப்படிப்பட்ட போதைப்பொருளான மெத்தம்பெட்டமைனைதான் அலெக்ஸ் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 950 கிராம் எடையுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, புதுக்கோட்டை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலெக்ஸை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைதாகியுள்ள அலெக்ஸ் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

