15 கி.மீ சேசிங்.. தொங்கிக் கொண்டு சென்ற போலீஸ்.. சென்னையில் சினிமாவை மிஞ்சிய கடத்தல் - நடந்தது என்ன ?
Chengalpattu Crime: செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய மர்ம நபர், 15 கி.மீ தூரம் விரட்டிச் சென்ற போலீசார். லாரியில் தொங்கியபடி சென்று மடக்கி பிடித்த போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் கடத்தப்பட்ட லாரியை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு, துரத்திச்சென்று போலீசார் கடத்தல் ஆசாமியை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு சுங்கச்சாவடி
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது ஓட்டுநர் இன்று காலை செங்கல்பட்டு பகுதியில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, பாஸ்ட் ட்ராக்கில் போதிய பணம் இல்லாததால், சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரம் கட்டிய ஓட்டுனர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஸ்ட் ட்ராக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக காத்திருந்தார்.
செங்கல்பட்டில் லாரி கடத்தல் சம்பவம் - Chengalpattu Lorry Kidnap
அந்த சமயத்தை பயன்படுத்திய சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் திடீரென லாரியை இயக்கி, சென்னையை நோக்கி அதி விரைவாக இயக்கத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து, அருகில் இருந்த காவலரிடம் தெரிவித்தனர்.
ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இந்த தகவல்களை, அருகில் இருந்த காவலர்களுக்கு வாக்கி டாக்கி வழியாக, தகவலை பரிமாறினர். மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த போலீசார் பேரிகாட்டுகள் ஆகியவற்றை அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை.
தாறுமாறியாக ஓடிய லாரி
இருசக்கர வாகனத்தில் ஒருபுறம் போலீசார் லாரியை வேகமாக பின் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாவகமாக போலீசார் ஒருவர் லாரியில் ஏறி, ஓட்டுனரை லாரியிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்தார். ஒரு வழியாக மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றே போது, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் தொலைத்து சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாறுமாறியாக ஊறி லாரி பொதுமக்களை, இடித்து தள்ளும் விதத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. லாரி தடுப்பின் மீது மோதி நின்ற போது, காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும் லாரியில் இருந்த ஓட்டுநரை பிடிக்க உதவி செய்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன.
காவல் ஆய்வாளரின் சாகச சம்பவம்
ஒரு கட்டத்தில் பொதுமக்களும் பின்தொடர்ந்து சென்று போலீசாருடன் சேர்ந்து லாரியை மடக்கி பிடித்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன் என்பவர் லாரியை பிடித்து தொங்கியபடி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்துள்ளார். லாரி ஒரு கட்டத்தில் பொறுமையாக சென்றபோது, சிறப்பு காவல் ஆய்வாளர் பாலமுருகன் லாரியில் ஏறியுள்ளார். அதன் பிறகு ஓட்டுநர் பதற்றம் அடைந்து, லாரியை தடுப்பில் மோடி தப்பிச்செல்லும் திட்டத்தை கையில் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலீசார் மர்ம நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















