BT Arasakumar : 100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
BT Arasakumar : தனியார் பள்ளிகிளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி சுமார் ரூபாய் 100 கோடி வரை ஏமாற்றிய அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளிக்க மத்திய குற்றப்பிரிவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக மோசடி
தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாகவும், பள்ளிகளின் தரம் உயர்த்தி தருவதாகவும், மேலும் நிலங்களுக்கு DTCP மற்றும் கட்டிட அனுமதி, RTE தொடர்பான அனுமதிகள் மற்றும் இதர அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிடி அரசகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர் மீது புகார் அளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.சி. இளங்கோவன், செயலாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு என்பவர் அளித்த புகாரில், "தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன்" என்ற பெயரில் பதிவு செய்யப்படாத கூட்டமைப்புகளின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சிலர், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நிரந்தர அங்கீகாரம் பள்ளி தர உயர்வு ,
100 கோடி ரூபாய் மோசடி செய்த பிடி அரசகுமார்
DTCP மற்றும் கட்டிட அனுமதி, RTE தொடர்பான அனுமதிகள் மற்றும் இதர அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி, அவர்களிடம் சுமார் ரூ.100 கோடியளவில் பணம் வசூலித்து, வாக்குறுதியளித்தபடி அரசு அனுமதிகளை பெற்றுத்தராமலும், பெற்ற பணத்தை திருப்பி வழங்காமலும் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டு, மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முழுமையான விவரங்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பணம் வசூலித்து மோசடி- புகார் அளிக்க அழைப்பு
எனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.டி.அரசகுமார் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்படி வழக்கின் விசாரணையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP கட்டிட அனுமதிகள் போன்றவற்றை அரசிடமிருந்து பெற்றுத்தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரியவருகிறது.
இவ்வழக்கில் சம்மந்தபட்ட ஏனைய குற்றவாளிகள் குறித்தும், தொடர்புடைய சாட்சியங்களை சேகரித்தும் புலன்விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் இது குறித்து புகார் அளித்திட சென்னை பெருநகர காவல் மத்திய குற்ற பிரிவினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் மத்திய குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















