Hospital Closed: கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? - 3 மருத்துவமனைகள் மூட அதிரடி உத்தரவு
பெரியபுத்தூர் பகுதியில் ஒரு மருத்துவமனை அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கருவில் உள்ள குழந்தையை கண்டறியும் சோதனை பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதில் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தையாக இருந்தது அதனை கண்டறிந்து கலைப்பதாக சுகாதாரதுறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக கருமுட்டை எடுப்பது, கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிவது போன்ற செயல்களில் சில மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
தாய்மார்கள் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று பாலினத்தை கண்டறியும் சோதனைகள் சேலம் மாவட்டத்தில் சில மருத்துவமனைகளில் நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக வீராணம் பகுதியில் குழந்தையின் பாலினத்தை சொல்லும் ஸ்கேன் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டு ஸ்கேன் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரசு மருத்துவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர். குறிப்பாக மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் சேலத்தில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக சேலம் டவுன், பொன்னம்மாபேட்டை, பெரியபுத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மூன்று மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த சில பெண்களுக்கு கருகலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை மூன்று மருத்துவமனைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெரியபுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை முறையான அனுமதி பெறாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

