குளக்கரையில் 6 வயது சிறுமி வாழ்க்கையை சீரழித்த கொடூரன்.. கடைசியில் உயிரும் போச்சு!
பீகார் மாநிலத்தில் ஒரு குளத்தின் கரையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாலையில் 6 வயதுடைய 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

பீகார் மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் கொலையும் செய்த கொடூர மனம் படைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. பிறந்த குழந்தை தொடங்கி வயதான மூதாட்டி வரை இந்த சம்பவத்தில் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பாலியல் ரீதியிலான குற்றங்களுக்கு கடும் சட்டங்களை இயக்கியும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. போதை பழக்கமும் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
இப்படியான நிலையில் தான் பீகார் மாநிலம் தர்பங்காவில் ஒரு கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விகாஸ் மஹ்தோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி சிக்கியது எப்படி?
பீகார் மாநிலத்தில் செயல்படும் தர்பங்கா பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பட்வா போகர் என்ற இடம் உள்ளது. இங்கிருக்கும் ஒரு குளத்தின் கரையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாலையில் 6 வயதுடைய 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விகாஸ் மஹ்தோ அங்கு வருகை தந்து 3 சிறுமிகளையும் கடத்த முயன்றுள்ளார். இரண்டு சிறுமிகள் தப்பிய நிலையில் ஒரு சிறுமியை குளத்தின் அருகில் இருக்கும் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து ஈவு இரக்கமில்லாமல் அச்சிறுமியை கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி காணாமல் போனது அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது குளத்தின் அருகில் ஓரிடத்தில் நாய்கள் வழக்கத்துக்கு மாறாக குரைப்பதை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிறுமி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட சிறுமியுடன் விளையாடிய அவளின் 2 தோழிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதனடிப்படையில் சிறுமிகள் அடையாளம் காட்ட விகாஸ் மஹ்தோ கைது செய்யப்பட்டர். அவர் வீட்டுக்கு பிடிக்க போலீசார் சென்றபோது விகாஸின் ஆடையில் இரத்தக்கறை இருப்பதும் தெரிய வந்தது.
இதனிடையே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பிப்ரவரி 8ம் தேதி காலையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விகாஸ் மஹ்தோ தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முழக்கமிட்டு சாலை மறியல், வாகனங்களுக்கு தீ வைப்பு, கடைகளை சேதப்படுத்தியது என பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாற அவர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதற்காக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத 40-50 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























